பாலாவின் நெருங்கிய நண்பரும் அவரது படங்களின் இணை இயக்குநருமான ‘ஆச்சார்யா’ ரவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

‘சேது’படம் தொடங்கி ஏறத்தாழ பாலாவின் அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ரவி. சேது வெளிவருவதற்கு முன் அவரது அறைத்தோழருமாக இருந்தவர். இருவரும் ’போடா வாடா’ என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

2006ம் ஆண்டு விக்னேஷ் நாயகனாக நடித்த ‘ஆச்சார்யா’படத்தை இயக்கிய பின்னர் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இயக்குநர் கஸாலியின் முகநூல் பதிவு

இன்று (28.12.2021) காலை இப்படியொரு துக்கமான செய்தி வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
‘ஆச்சார்யா’ ரவி!
இயக்குநர் மற்றும் வசனகர்த்தா திரு. லியாகத் அலிகான் அவர்களிடம் உதவியாளராகப் பணி செய்தவர்.
இயக்குநர் பாலாவிடம் பல படங்கள் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர்.
அவரது 2-வது படம் ‘என்னதான் பேசுவதோ’.
பீகாரிலிருந்து பெண் குழந்தைகளை எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அந்தப் பெண் தமிழ் நாட்டில் வளரும்போது டீன் ஏஜ் பையன்களுடன் எப்படி வெள்ளந்தியாகப் பழகுகிறாள், துபாய்க்கு அவளை அனுப்ப முயலும்போது என்ன நடக்கிறது, முடிவு என்ன என்பது பற்றிய கதை.
விரசமில்லாமல், ஆழமான காட்சிகளோடு படமாக்கியிருந்தார்.
இசையமைப்பாளர் டி.இமான் D.imman நெஞ்சை உருக்கும் வகையில் பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருந்தார்.


அந்தப் படத்தை எங்கள் தமிழ் சினிமா கம்பெனி வெளியிடுவதாக இருந்தது.
பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே பாலா சூர்யா இணையும் படத்தில் வேலை செய்யச் சென்று விட்டார்.
பாலாவிடம் டிஸ்கஸ் செய்வதற்காக திரு. லியாகத் அலிகான் Liyakathalikhan அவர்களை பாலா அழைப்பதாக ரவி கூட்டிச் சென்றார்.
ஏற்கெனவே லியாகத் அவர்கள் பாலாவின் ‘நந்தா’ படத்தின் கதையில் நிறைய கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் சிறிய உடல் நோவு காரணமாக ரவி, சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்தார்.
பின்பு மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார்.
இன்னும் சில நாட்களில் குணமாகி சென்னைக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, காலையில் ‘ராசைய்யா’ கண்ணன் ரவியின் மரணம் பற்றிய செய்தியோடு மனதில் பாரத்தை ஏற்றினார்.
சினிமா பற்றிய எத்தனை கனவு, எத்தனை ஈடுபாடு, விளிம்பு நிலை மக்களைப் பற்றிய கதைகளை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம்… நிறையப் பேசியிருக்கிறோம். அவையெல்லாம் கனவாய் ஒரு நொடியில் பறந்து விட்டது.
எல்லோருக்கும் பொதுவான இறைவனின் நிழலில் அவரது ஆன்மா அமைதியுறட்டும்!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.