பனித்திரை வெளியானது 1961ஆம் ஆண்டு டிசம்பர் 29
முக்தா பிலிம்ஸ் தொடக்கம் 01/04/1960

அப்பா முதலில் அர்தாங்கி எனும் ஹிந்தி பட உரிமை வாங்கி எடுக்க ஆசைப்பட்டார் மீனாகுமாரி மற்றும் ஆகா நடித்த படம் அது.அந்த படம் தான் ” பனித்திரை ” ஹிந்தி மொழியில் அந்த படம் சுமாரான வெற்றியினை பெற்ற படமாக விளங்கியது.
பெண்களுக்கு எதிராக அக்காலத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை களையெடுக்கும் மிக அற்புதமான கருவை கொண்டது பனித்திரை திரைப்படம்.
இப்படத்தின் கதாபாத்திரப்படி ஒரு பெண் என்பவள் ராசியற்றவள் அவளால் நஷ்டங்களே சேரும் என்றுரைத்து பெண்ணடிமை கூறி அவர்களை குடும்பத்திலும், சமூகத்திலும் புறந்தள்ளி ஒதுக்கி வைக்கும் சூழலில், ஒருவர் அவளை திருமணம் செய்துகொண்டு அவளால் நன்மை உண்டு வீட்டின், மஹாலக்ஷ்மி அவள் என்று உணர்த்தி பெண்மையின் மென்மையினை கூறும் அதே நேரத்தில், மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுத்திட்ட அற்புதமான காவியம் பனித்திரை.

பொதுவாக எங்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்றும் அவர்களை மிகவும் மதித்து நடத்திட வேண்டும் என்றும் அப்பா அடிக்கடி கூறுவார், அதனையே விரும்பவும் செய்வார். இவ்வாறான கொள்கைகளை தமது திரைப்படங்களில் இடம்பெற செய்தும் மற்றும் தமது புத்தகங்களில் எழுதியும் பெண்களுக்கு பெருமை சேர்த்தவர் என்பதில் எங்களுக்கு அதீத சந்தோஷம் உண்டு.
இவ்வாறாக அப்பாவிற்கு மிகவும் பிடித்த கருவாக இப்படம் அமைந்துள்ளதால் இப்படத்தினையே தமிழில் எடுக்க மிகவும் விரும்பினார்.

முதலில் இப்படத்திற்கு A.நாகேஸ்வரராவ் அவர்கள் மற்றும் சரோஜாதேவி அவர்கள் இருவரும் ஒப்பந்தமாகி பூஜை போட்டு இனிதே தொடங்கியது. அதே சமயத்தில் A நாகேஸ்வரராவ் அவர்கள் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியாக பணியாற்றி வர தொடங்கிய தருணம் அது
மேலும் அவரது தேவதாஸ் உள்ளிட்ட படங்கள் அங்கே பெரும் வெற்றியினை ஈட்டி கொண்டாடி வரும் சமயத்தில் இங்கே தமிழ் திரைப்படங்களில் தெலுங்கு திரைப்படங்களினை விட தமது அங்கீகாரம் குறைவே என்றெண்ணி ஒரு முடிவெடுத்தார் A நாகேஸ்வரராவ் அவர்கள். அவர் இப்படத்தில் பணியாற்றி உள்ள வரையில் உள்ளபடி அட்வான்ஸ் தொகையினை திருப்பி கொடுத்துவிட்டு தம்மால் பனித்திரையில் தொடர்ந்து பணியாற்றிட இயலாதமைக்கு வருத்தம் தெரிவித்து விலகிவிட்டார்.

இந்நிலையில் நாகேஸ்வரராவ் விலகிவிட்டபடியினால் வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க பெரிதும் முயன்றுவந்தனர்
எவர் ஒருவரும் இப்படத்தில் நாயகன் வேடம் ஏற்க முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது ” முக்தா பிலிம்ஸ் ” ஒரு புது நிறுவனம் என்ற காரணமும் ஆகும். மற்றும் கதைபடி கதாநாயகிக்கே முக்கியத்துவம் ஆகும்.

திரையுலகில் இவ்வாறான பேச்சும், செயலும் இருக்கும் சமயத்தில் சரோஜாதேவி அவர்கள் எங்கள் மீதும் இந்த படத்தின் கதை கரு மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டார். கதாநாயகனாக யாரும் நடிக்க முன்வராத நிலையில் ஜெமினி கணேசன் அவர்களிடம் சரோஜா தேவி அவர்கள் நேரில் சென்று இப்படம் குறித்து விளக்கியும் அதன் சாதக அம்சங்களை கூறியும் ஜெமினி கணேசன் அவர்களை இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள செய்தார்கள்.
சரோஜாதேவி அவர்களின் இவ்வாறான சிறந்த நல்ல முயற்சியின் பலனினால் நின்றிருந்த இருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முன்னேற்றம் காண வழி கிடைத்தது.அவர்களினால் தான் இது சாத்தியம் ஆனது.

1960 ஆம் ஆண்டு தொடங்கிய பனித்திரை திரைப்படம் 1961 டிசம்பரில் ரிலீஸ் ஆனது. அதாவது படம் தொடங்கி ஏறத்தாழ ஒன்னரை வருடம் கடந்து ரிலீஸ் ஆகியது.
இப்படம் உருவாகி தொடங்கி நடைபெற்று வரும் ஒன்னரை வருட காலங்களில் பலவித இன்னல்கள் சிக்கல்கள் மேலும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளும் கூடவே இருந்தது . பொருளாதார ரீதியிலான நஷ்டத்தினை இப்படம் கொடுக்கவில்லை எனினும் பெரிய லாபம் இல்லை. ஆனால் படத்திற்க்கு மிக பெரிய அங்கிகாரம் கிடைத்தது.

மேலும் 1961 இல் வெளியான இப்படம் மறு பதிப்பாக மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் 25 ஆண்டுகள் மிக சிறப்பாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கே.வி.மகாதேவன் அவர்களின் மிக சிறந்த இசையில் உருவான சிறந்த பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஒன்றாகும். இப்படத்தின் 60 ஆண்டு கால பயணத்தின் வாயிலாக சிறப்பாக கொண்டாடும் இவ்வேளையில் நாங்கள் கூறிக்கொள்ள விரும்பும் ஒன்று நாங்கள் என்றென்றும் சரோஜாதேவி அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களால் தான் இப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவும் முக்தாவிற்கு கிடைத்தது என்பது சத்தியமான ஒன்றாகும்.

ஆகவே முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தாரின் பனித்திரை திரைப்படம் 60 ஆண்டுகள் கடந்து மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் மிக சிறந்த படமாக விளங்கியள்ளதை கொண்டாடும் மிகவும் ஆனந்தமான தருணத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவினை வழங்குகிறோம்.

60 ஆண்டுகள் கடந்திட்ட மிக சிறந்த நிறுவனமாகிய எங்கள் முக்தா பிலிம்ஸ் அன்றுமுதல் இன்றுவரை மக்களின் கலை சார்ந்த சேவைக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

இன்றைய காலத்திலும் எங்கள் நிறுவனம் வாயிலாக திரைப்படங்களினை இயக்கியும் தயாரித்தும் வழங்கி வருகிறோம்.

இப்போது வேதாந்த தேசிகர் தெலுங்கு மொழி திரைப்படம் எடுத்து வருகிறோம் மேலும் இணையவழி பயிற்றுவிதல் (online class) ஒன்றினை எங்கள் நிறுவனத்தின் வாயிலாக தொடங்க இருக்கிறோம் இப்பயிற்சி என்பது சர்டிபிகேட் கோர்ஸ் ஆக இருக்கும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிட உள்ளோம்
முக்தா பிலிம்ஸ் தொடங்கியது முதல் எங்கள் தந்தை முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் ஐந்தாறு படத்திற்கு இயக்குனராக இருப்பினும் எங்களது பெரியப்பா முக்தா ராமஸ்வாமி அவர்கள் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும், டிஸ்டரிபியூட்டர் ஆகவும் தியேட்டர் ரிலீசுக்கு எக்சிபியூட்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

அண்ணன் தம்பியாக அவர்கள் இருவரும் இணைந்து இந்நிறுவனத்தினை வளர்த்தது போல அவர்களின் வாரிசுகளாகிய நாங்களும் முக்தா ரவி, முக்தா சுந்தர்,மற்றும் முக்தா கோவிந்த் அவர்கள் இந்நிறுவனத்தினை வழிநடத்தி வருகிறோம்.
முக்தா சகோதரர்களின் வழிகாட்டுதல்களினாலும மற்றும் முக்தா குடும்பத்தினர்கள் தரும் ஆதரவினால் தான் இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த இயலுகிறதுன் இந்நிறுவனம் என்பது ஒரு குடும்ப நிறுவனமாகும்.

இது எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும், ஒற்றுமையே எங்கள் பலமும் ஆகும்

மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் அனைத்து ஊழியர்கள் ,டெக்னீஷியன்ஸ், விநியோகஸ்தர்கள், திரையரங்கம் உரிமையாளர்கள, PRO”s , விளம்பரதாரர்கள், TV சேனல்கள், இன்டர்நெட் மற்றும் ஊக்கம் அளித்த பத்திரிகை நண்பர்கள், ரசிகர்கள் அளித்த ஆதரவினால் மட்டுமே இன்று இந்நிறுவனம் உயர்ந்துள்ளது.

ஊரே கூடி தேர் இழுத்து திருவிழா கொண்டாடுவது போன்றது இந்நிறுவனத்தின் வெற்றி எல்லோருக்கும் பங்கு உள்ள ஒன்றாகும் அனைவருக்கும் இந்த இனிய வேளையில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
முக்தா பிலிம்ஸ் மற்றும் குடும்பத்தினர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.