இந்திய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 92
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தித் திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் நேரடியாக மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார் (அதிலும் மூன்றாவது அவர் பாடியது என இன்றுதான் தெரியும்): 1) ஆராரோ ஆரிரோ (ஆனந்த்) 2) வளையோசை (சத்யா) 3) எங்கிருந்தோ அழைக்கும் (என் ஜீவன் பாடுது). மூன்றும் 80களின் பிற்பகுதியில் வந்தவை. மூன்றும் இளையராஜா இசை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பிரதித் சம்தானி மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், பாடகி லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நடைமுறைகளை அவர் பொறுத்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் உயரிய விருதுகளான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய மறைவு இசைப்பிரியர்களைப் பேரரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினர், இரசிகர்களும் கண்ணீருடன் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.