2019 ஆம் ஆண்டில், முக்கோண விதி என்ற புதிய ஒரு கதைக்கருவோடு, வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஜீவி.

’மாநாடு’படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், முந்தைய பாகத்தை இயக்கிய அதே இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது.

ஜீவி முதல் பாகத்தின் கதை முக்கோண தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கும். அதனைப்பற்றி தெரிந்து கொண்ட வெற்றி அதை தடுக்க முயற்சி செய்ய அதைத் தடுத்து நிறுத்தினாரா இல்லையா? என்பது முதல் பாகத்தின் கதையாக இருந்தது.
இந்த இரண்டாவது பாகத்தையும் அதன் தொடர்ச்சி போல மாற்றி ஒரு கிரைம் திரில்லராக கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் வி ஜே கோபிநாத்..முதல் பாகத்தைப் பார்க்காதவர்களுக்கும் கதையை மறந்திருப்பவர்களுக்குமாகச் சேர்த்து முந்தைய படத்தின் கதைச் சுருக்கத்தை கொஞ்சம் ஓட விட்டு இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டாவது பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக வரும் வெற்றி தன் மனைவி அஸ்வினியின் மருத்துவ செலவை சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த சிகிச்சைக்கு பெரும்பணம் தேவைப்படும் நிலையில் அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அஸ்வினியின் பூர்வீக சொத்து ஒன்றும் கடனில் மூழ்கும் நிலைமைக்கு வந்துவிட கார் பழுது, அக்கா மகள் நோய்வாய்ப்படுவது என்று மேலும் அவருக்கு பிரச்சனைகள் அழுத்த புதிதாக அறிமுகமான பணக்காரர் முபாஷிர் வீட்டில் திருட நினைக்கிறார்.

தனக்கு கடை வைத்துக் கொடுத்து வாழ்க்கையை நடத்த உதவிய நண்பனுக்காக வெற்றியின் நண்பர் கருணாகரனும் இந்த திருட்டில் ஈடுபட ஒத்துக்கொள்ள என்ன ஆகிறது என்பது மீதி கதை.

வெற்றியைப் பொறுத்தவரை சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது அத்துடன் இயல்பாக நடிப்பதை தன் பாணியாக வைத்துக்கொண்டு தனி பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். இதை வெற்றியின் அடையாளம் என்றும் அவரது வெற்றியின் அடையாளம் என்றும் கொள்ளலாம்.

பாத்திரத்துக்கேற்ற பொருத்தமான தேர்வாக வருகிறார் அஸ்வினி. கண் பார்வையற்றவராக பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அவரது நடிப்பு நம்பகமாக இருக்கிறது.
காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர பாத்திரத்தையும் தன்னால் தாங்க முடியும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாகரன். ஹீரோவாகும் முயற்சியை அவர் கைவிட்டால் சிறந்த குணச்சித்திர நடிகராக தொடர்ந்து சோபிக்க முடியும். ஹீரோவாக விரும்பினால் மக்களை சோதிக்க மட்டும்தான் முடியும்.
பிரவீன் குமார் ஒளிப்பதிவு கச்சிதமாக பொருந்தியுள்ளது. ‘நீ நீ போதுமே’ பாடலும், பாடல் காட்சிகளும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ரசிக்க வைக்கிறது. தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் தொகுப்பு சிறப்பு.
வழக்கமான அடிதடி மசாலாக்களைக் கொட்ட நினைக்காமல் மத்திய வர்க்க மக்களின் வாழ்வியல் சுவார்சியங்களை, அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த வகையில், முதல் பாகத்தைப் போலவே இந்த பார்ட் 2’விலும் கவனம் ஈர்க்கிறது இந்த ‘ஜீவி 2’.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds