ஜினி முகம்மது ! இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது. யார் இவர்? என்ன செய்தார்? மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூர மனிதராக சித்தரிக்கப்படுகிறார்?

அந்தக்கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெரும் செல்வத்தை அள்ளிக்கொண்டு வரலாம் என்று கணக்குப்போடுவதில் மட்டுமே குறியாய் இருப்பார்கள். படையெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை.கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.

இருவகையினரின் நோக்கம் ஒரே வகையானது தான் என்றாலும், அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை எழுதி வைப்பதில்லை. தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள், தங்களின் வீர,தீர பராக்கிரமங்களை எவ்வளவு கேவலமானவனாய் இருந்தாலும், சிறப்பாக எழுதிவிடுவார்கள். மன்னனைப் பாடுவது சில புலவர்களின் வழக்கமாகிறது பின்னர் அதுவே வரலாறு ஆகிவிடுகிறது.

இத்தகைய இரு வகையினரில் முதல் வகையினர் கொள்ளைக்காரர்கள் என்றும்,  இரண்டாவது வகையினர் பொய், புரட்டு மூலம் யோக்கியவான்கள் ஆகிவிடுவார்கள். இதைதான் இன்று வரலாறு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கேயே இருந்து கஜினி தன் வரலாறை எழுதியிருந்தால்,அது எப்படி இருந்திருக்கும்.?அந்த வாய்ப்பு கஜினிக்கு கிடைக்காமல் போயிருக்கலாம், இல்லையேல் அதைப்பற்றி அவன் கவலைப்படாமல் போயிருக்கலாம். கோவில்களில் ஏன் கொள்ளையடித்தார்கள்? அன்றைய காலத்தில் சொத்துகள் கோவில்களில் தான் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிப்பவனின் நோக்கம் வழிபாட்டு உணர்வின் மீதான தாக்குதல் அல்ல. சொத்துகளை கொள்ளையிட வேண்டும் என்பதுதான். இதற்கு எம்மத மன்னர்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும். பெயர் முகமது தான். கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.

“இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்குக் காரணம் இக்கோவிலின் லிங்கம் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியது தான்.

இதன் சிறப்பு காரணமாக, ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. எனவே சொல்ல முடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது. குஜராத்தின் ஆறு அரசர்களும் அக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின் அர்ச்சகர்கள் எத்தனை பேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ந்து கொண்டிருந்தது. அதை எப்படியேனும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற திட்டம் பலருக்கும் இருந்தது. கஜினி படையெடுத்து வந்த போதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச் செய்தனர். கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை. தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர் வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம் போட்டு காத்திருந்தான் கஜினி. கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம் போய் ஒரு கோரிக்கை வைத்தனர். நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர். கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர். எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர். ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன். அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள். “மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும், காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும், ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,  அன்னதானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தார்? இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமணங்களிலும்,  நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப்பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார். இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும், யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறு கட்டளையிட்ட்தால், யாகசாலை நிறுவும் பணியில் மன்னர்கள் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி, குழிகளில் நெருப்பு வளர்த்து, நெய், கோதுமை, சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்ற வேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக் கொண்டிருந்தார்கள். கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும், ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும், நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான். மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்) வேலை என்று சொல்லி, நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும் தகவல் தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும் அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போட வைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான். கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும். இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய்.

கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கஜினி கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் “இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்”என்று கூறிவிட்டு,  விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது. (நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது. எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு, எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை. சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற, அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க, அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விப்பட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு, அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட  துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான். மிரண்டு போன அர்ச்சகர்கள், சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப்படுகிறது.இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கோவில் சாயத்துவங்க,அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க. இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம். குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல. வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி தான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். 1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார். அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட “சத்தியார்த்தப் பிரகாசம்” என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார். இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம் தான். இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது  இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்று நினைத்துள்ளனர்.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.எளிய மதநம்பிக்கை கொண்ட மக்களைப் பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் வலதுசாரி பிற்போக்குவாதிகள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பழி போடுவது நியாயம் அல்ல. கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்கிறது. ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர். கி.பி.1192 ல் முகமது கோரியும், கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி. 1296 ல் அலாவுதீன் கில்ஜியும், கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும், கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும், கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும், அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள். இஸ்லாமிய மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல. சாதியை ஒழிப்பதல்ல. அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள். ஆர்எஸ்எஸ் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து என்ற தன்னுணர்வு கொண்ட மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும். ஆகவே உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும். மற்ற சமூகத்தின் வழிபாட்டுத் தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது. அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு. ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு. இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே “தீன் இலாஹி” என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா, பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக.. இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான சமூக சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்.

சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், இராஜாராம் மோகன்ராய், தேவேந்திரநாத் தாகூர், கேசப் சந்திர சென், லாலா ஹன்ஸ் ராஜ், நாராயண குரு, அய்யன் காளி, குருபிரசாத், குருநானக், குருசாயி,  ஐயா வைகுண்டர், ராமானுஜர் என்று இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

 

 

ஒரே கேள்வி தான். இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள் போராடினார்களே எதற்கு? பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே? 1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், உன்னை விட நான் மேலானவன் என்ற ஒற்றைச் சொல்லில் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனிய ஆதிக்கக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதைத் தவிர, இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல்லுங்கள்?

கட்டுரையாளர்: சூர்யா சேவியர், அரசியல் செயற்பாட்டாளர்

நன்றி: அரண் செய்.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்


Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds