டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார்.

காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.

வரும் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா மே 21 அன்று நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார், செயலாளர் பேரரசு, துணைத் தலைவர் ஆர்.அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.

விழாவில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,

இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும், வாழ்த்துரையும் சுருக்கமாகவும்சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம்.உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி.அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள்.ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை.
இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ்திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது.பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார்.‌அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள்.நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது.
இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை.
எப்போது ஒரு நாயகனுக்கும்நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ்.அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும்.அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.‌இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை.அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள்.தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை.சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன்.‌ தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார்.அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள்.இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது.கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை இரசிக்கிறார்,எதனை இரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது.முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும்.
இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்தப்படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில்,

என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள்.அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள்.நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா.என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர்.இவர் இதற்கு முன் ‘தேர்ட்டீன்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி ‘சென்னை பிரம்மாக்கள்’ என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன்.இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது.அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜின் -தி பெட்’ திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில்,

16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய்.16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின் என நான் வாசித்திருக்கிறேன்.இந்த ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.
பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை இரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் கேயார் பேசுகையில்,

ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்.தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது.இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’.
இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது.எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ்,நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார்.அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார்.அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது என்றார்.

இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில்….

எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது.படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது.படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை.ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு.அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள்.பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி என்றார்

தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில்,

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின்’ என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன்.அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை.அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார்.கதை விவாதம் எல்லாம் நடந்தது.ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது.‌அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம்.அவர்கள் தர மறுத்து விட்டார்கள்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து ‘ஜின் தி பெட்’ என டைட்டில் வைத்தோம்.இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள்.கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள்.ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. ‘ஜின்- தி பெட்’ என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது.
இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை என்றார்.

YouTube player

நடிகை பவ்யா தரிகா பேசுகையில்,

2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன்.அப்போதுதான் என்னுடைய தோழிகள் ‘ஜின் ‘என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள்.அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை.ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள்.அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து’ பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன்.அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார்.இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் ‘ஜின்’. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது.
இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார்.அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்.
இயக்குநர் பாலா மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் நட்பாக பழகக் கூடியவர். கலைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு பிடித்திருந்தது.‌ அதனால் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் போதும் இயல்பாக இருந்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நல்லதொரு பாசிட்டிவான வைப் இருக்கிறது. ஜின் எனக்கு என் வாழ்க்கையில் ஆசியை வழங்கி இருக்கிறது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். மே 30ம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் பேசுகையில்,

நீண்ட நாள் கழித்து கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம்.இப்படத்தின் பாடல்களைப் பற்றியும்,பின்னணி இசையை பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி.படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாததாக இருந்தது. பணியாற்றிய பாடலாசிரியர்களுக்கும் நன்றி. திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து சந்தோஷமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
‘ஜின் தி பெட்’ ஃபேமிலி என்டர்டெய்னர்.படத்திற்கு பின்னணி இசையை அமைக்கும் போது உற்சாகத்துடன் பணியாற்றினோம். இந்தப் படத்தின் மூலம் டி ஆர் பாலா என்ற அருமையான நண்பர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்.அவருடைய முதல் படம் இது, கடுமையாக உழைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி மா…’என்ற பாடலுக்கு இரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி.இந்தப் படத்தின் நாயகனான முகேன் மல்டி டேலன்டட் பெர்சன்.நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இயக்குநர்-தயாரிப்பாளர் டி ஆர் பாலா பேசுகையில்,

கடவுளுக்கு நன்றி. சின்ன வயதில் இருந்து எனக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தவர் என் அம்மா தான். வீட்டிலிருந்து வெளியே சென்று நம்பிக்கையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அவர்.அதற்கான அனைத்து விஷயங்களை கற்றுக் கொடுத்தவரும் என் அம்மா தான்.இந்த படத்தை தயாரித்திருக்கும் ஃபேரிடேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கும் என் அம்மா கொடுத்த ஊக்கம் தான் காரணம். இப்படி ஒரு மேடைக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன்.இன்று கிடைத்திருக்கிறது.இந்த தருணத்தில் என் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான அனில் குமார் ரெட்டி மற்றும் ரகு அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படத்தின் தயாரிப்பிற்காக முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் குழுவுடன் இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இணைந்த பிறகு படத்தின் தரம் உயர்ந்தது. அவர்களும் கடுமையாக உழைத்து ஹிட் பாடல்கள் வழங்கி இருக்கிறார்கள்.இப்படத்திற்கு அருமையாக பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்,கலை இயக்குநர்,கிராபிக்ஸ், ஸ்கிரிப்ட் டாக்டர்,சண்டைப் பயிற்சி இயக்குநர், நடன இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராதாரவி, முகேன் ராவ், பவ்யா தரிகா, பால சரவணன், வினோதினி, ஜார்ஜ் விஜய், ரித்விக், இமான் அண்ணாச்சி என இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
நான் விஜய் சார் நடித்த மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.அந்தத் தருணத்தில் அவர் ‘பொறுமையாக இருக்க கற்றுக்கொள்’ என அறிவுறுத்தி இருக்கிறார்.அதனை நான் இன்று வரை உறுதியாக பின்பற்றி வருகிறேன்.
இந்தத் திரைப்படத்தை வாங்கி இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விளம்பர படம் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றபோது அங்கு என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய வீட்டில் ஜின் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார்.அவர்கள் தான் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.இது ஜின், வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு.தண்ணீர் கூடாது. சூரிய ஒளி கூடாது.இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகளை சொன்ன போது முதலில் ஆச்சரியமடைந்தேன்.
எனக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையைப் போல் பேய்கள் மீதும்,அமானுஷ்யங்கள் மீதும் நம்பிக்கை உண்டு.ஜின்னை பற்றி அவர்கள் சொல்லும் போது அவர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தான் நான் முதலில் பார்த்தேன்.இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியா,தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளதாக சொன்னார்கள்.இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்ய தொடங்கினேன்.கூகுளில் ‘டோயோ’ என பதிவிட்டு தேடினால் இதைப்பற்றிய ஏராளமான விஷயங்கள் இடம் பிடித்திருப்பதை காணலாம்.இதனை கருவாகக் கொண்டு நான் ஒரு கதையை உருவாக்கினேன்.
இது தொடர்பாக மலேசியாவை சார்ந்த மந்திரவாதி ஒருவரிடம் உரையாடிய போது, ‘ஜின்னை பற்றிய படத்தில் அதனை காமெடியாக காட்சிப்படுத்தாதீர்கள். சீரியஸாக உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்.ஆனால் நாங்கள் அதனை காமெடி ஹாரர் திரைப்படமாகத்தான் உருவாக்கியிருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அமானுஷ்ய விசயங்கள் நடைபெற்றன.இப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் ஜின் தொடர்பான அமானுஷ்ய அனுபவம் கிடைத்ததாக சொன்னார்கள்.
இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு மிகப்பெரிய முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை சொன்னேன்.அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பரிந்துரையின் பெயரில் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரை சந்தித்து அவரிடமும் கதையை விவரித்தேன்.கதையை கேட்டு சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகள் இப்படத்தில் பணிகள் நடைபெறவில்லை.அதன் பிறகு இப்படத்தினை நானே சொந்தமாக தயாரித்து இயக்க தீர்மானித்தேன். இந்தத் திரைப்படம் எதிர்வரும் முப்பதாம் தேதியன்று வெளியாகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஆறுதலையும்,மகிழ்ச்சியையும் தரும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி எண்டர்டெய்னர்.அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து இரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் முகேன் ராவ் பேசுகையில்,

இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன்.என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும்.இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார்.அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும்,தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் அவருடன் தொடர்ந்து பயணிக்கவும் விரும்புகிறேன்.
இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து கலைஞர்களையும் அக்கறையுடன் கவனித்தனர்.
தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று தெரிந்து கொண்டேன்.அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும் இடையேயான நட்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்,நடிகர், நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.ஏராளமான திரைப்படங்களை பார்த்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.அதனால் சண்டை காட்சிகளின் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன்.சில படங்களின் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான்.அவரும் இங்கு எங்கேயோ தான் இருப்பார்.அவருக்கும் நான் நன்றியை சொல்கிறேன். இந்த ‘ஜின் தி பெட்’ படத்தின் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. அனைவரும் மே 30ம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.