சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ.
ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இப்படம் வெளியானது முதலே இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று,ஒரு வாரத்தில் 104 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இலாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
இப்படம் திரையரங்குகளை திருவிழாக் கோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைக் குவித்துள்ளது.
இந்நிலையில்,மே 7 ஆம் தேதியன்று, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிகை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் ஊடக நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.ஊடக நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதனால் இப்படத்தின் வசூல் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் உள்ளடக்கத்தைத் தாண்டி,இப்படத்தின் நாயகன் சூர்யா என்பதாலும் தயாரிப்பாளர்களில் ஒருவராக நடிகை ஜோதிகா இருப்பதாலுமே இப்படத்துக்கு எதிராக தீவிரமாகப் பலர் கருத்துத் தெரிவித்து வந்தனர்.சூர்யாவுக்கு இந்தப்படமும் படுதோல்வி இனிமேல் அவர் அவ்வளவுதான்,எங்கள் சமூகத்தைத் தாக்கிப் பேசினால் இப்படித்தான் என்று பல்வேறு எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்பட்டன.
இவ்வளவு எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இப்படம் இவ்வளவு பெரிய வசூலை அப்படம் பெற்றிருக்கிறது என்றும் இது எதிர்ப்பாளர்கள் முகத்தில் பூசப்பட்ட கரி என்றும் திரைத்துறையினர் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.