இந்தியாவில் கடல் நடுவே கண்டுபிடிக்கப்படும் எரிபொருள் ஆயில் 15 வருடத்திற்கு எந்த நாட்டையும் எதிர்பார்க்காமல் நம் நாட்டிலேயே பெட்ரோல் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யலாம் என்ற நிலை ஏற்படுகிறது. இதையறிந்த பெரும் தனியார் நிறுவன அதிபர, ஒன்றிய அமைச்சரிடம் பேரம் பேசி அதை தங்களது நிறுவனத்திற்கு தாரை வார்த்து தர கேட்கிறார். அதற்காக 40 ஆயிரம் கோடி லஞ்சம் தர பேசப்படுகிறது.
40 ஆயிரம் கோடி பணத்தை அதிகாரிகளுக்கு எப்படி வழங்குவது என்பது பற்றி முன்னாள் சிபிஐ அதிகாரியை (நாகார்ஜுனா) கையில் போட்டுக்கொண்டு தனியார் நிறுவன அதிபர் திட்டம் போடுகிறார். அதன்படி சில பிச்சைக்காரர்களை பினாமியாக்கி அவர்களின் பெயரில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் லஞ்சப் பணத்தை கைமாற்றி தர முடிவு செய்யப்படுகிறது. இதற்காக பிச்சைக்காரராக இருக்கும் தேவா (தனுஷ்) உள்ளிட்ட சிலரை அழைத்து வந்து பினாமியாக்குகிறார்கள். பணம் கைமாறியவுடன் அவர்கள் ஒவ்வொருவராக சொல்லப்படுகின்றனர். இந்த சதியை அறிந்த தேவா அந்த கூட்டத்திடமிருந்து தப்பித்து வருகிறார். அவரை பிடிக்க எல்லா பக்கத்திலும் அடியாட்கள் தேடுகின்றனர். அவர்களிடமிருந்து தேவா தப்பினாரா? தன் பெயரில் பினாமியாக வைக்கப்பட்ட பத்தாயிரம் கோடி ரூபாயை என்ன செய்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.
மணி லாண்டரிங் அதாவது சட்டவிரோத பண பரிவர்த்தனை வார்த்தை சமீப காலமாக அடிக்கடி காதில் விழுகிறது. அது தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு விடுவதும் தினம் தினம் செய்தி களாக வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் கொஞ்சம் நிஜத்தையும், கொஞ்சம் கற்பனையையும், கொஞ்சம் செண்டிமெண்ட்டையும் வைத்து குபேரா பட கதை உருவாகியிருக்கிறது.
“என்னிடமிருந்து ரசிகர்கள் இந்த மாதிரியான படம்தான் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நான் எப்படி மாறுபட்ட பாத்திரங்களை படத்துக்கு படம் நடித்து அவர்களுக்கு தருகிறேனோ, அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று சமீபத்தில் தனுஷ் கூறினார். அந்த வகையில் குபேரா படத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் கதாபாத்திரமாக அதாவது திருப்பதி மலையில் கையேந்தி பிச்சை எடுக்கும் பிச்சைக்கார கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு பிச்சைக்காரன் கோடீஸ்வரனானால் அதுவும் சட்ட விரோதமாக கோடீஸ்வரனாக்கப்பட்டால் அவன் கதி என்னவாகும் என்பதை எல்லாம் தனது கதாபாத்திரம் மூலம் கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் தனுஷ்.
ஹீரோ என்ட்ரி பாடல், அதிரடி ஆக்சன், உதட்டில் எச்சில் ஊற வைக்கும் காதல் காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் சாதாரண ஒரு பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பது ஆச்சரியம். தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை பிச்சைக்காரன் கதாபாத்திரத்தை எந்த வகையிலும் பணக்கார கதாபாத்திரமாக சினிமாத்தனமாக மாற்றாமல் யதார்த்த மனிதனாக தனுஷ் வாழ்ந்து காட்டி இருப்பது தான் படத்தின் வித்தியாசமான அணுகுமுறை.
“வேலை தருகிறோம் வா” என்று அழைத்தவுடன் கூப்பிட்டவர்கள் கூடவே வரும் தனுஷ் மற்றும் அவருடன் வரும் இன்னும் சிலரும் தாங்கள் ஒரு அபாய வளையத்துக்குள் சிக்கிக் கொள்கிறோம் என்பது தெரியாமல் இழுத்த இழுப்புக்கெல்லாம் கையெழுத்து போடுவது, கோட்டு சூட்டு அணிவது என்று அப்பாவித்தனத்தை வெகு நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள் .
தான் சிக்கலில் சிக்கிருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் தனுஷ் சதிகார கூட்டத்திடமிருந்து தப்பிப்பதும் அந்த சமயத்தில் தன் எதிர்வரும் ராஷ்மிகா மந்தன்னாவை வம்படியாக தனுஷ் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அவரையும் ரவுடி கூட்டத்திடம் சிக்க வைத்து சிக்கலை அதிகரிப்பதும் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது.
தனுஷுக்கென்று பாடல் காட்சி வராதா, சண்டைக் காட்சி வராதா என்று ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டு கிளைமாக்ஸ் நெருக்கத்தில்,”போய் வா நண்பா” பாடல் தந்து அதிரடி ஆட்டம் ஆடவைப்பதும், அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆக்சன் காட்சியும் அதிரிபுதிரியாக வைத்து தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா.
ராஷ்மிகா மந்தன்னாவையும் கவர்ச்சி கன்னியாக காட்டாமல் சராசரி பெண்ணாக காட்டி வேலை வாங்கியிருப்பது இயக்குனரின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
“என் சாவ நான் சாகறேன், உன் சாவ நீ சாவு” என்று அடிக்கடி விரக்தியாக வசனம் பேசி தனது பரிதாப நிலையை வெளிப்படுத்துகிறார் ராஷ்மிகா.
புருவத்தை உயர வைக்கும் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் நாகார்ஜுனா , தன்னை நம்பி வந்தவர்களை உயிர்பலி தருகிறோமே என்று தர்ம சங்கடத்தில் சிக்கி கனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பண முதலைகள் எப்படி தங்களது பினாமிகளை உருவாக்குகிறார்கள், போலியான நிறுவனங்களை உருவாக்கி எப்படி சட்டவிராத பண பரிமாற்றம் செய்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா. இரண்டாம் பாதி கதையை நீட்டி முழக்குவதுபோல் உள்ளது. 10 நிமிடம் ட்ரீம் செய்தால் விறுவிறுப்பு அதிகரிக்கும்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை காட்சிகளுக்கு
வழிவிட்டு நிற்கிறது. “போய் வா நண்பா” பாடலில் தனது முத்திரை பதித்து விடுகிறார்.
சுனில் நரங் ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி), புஷ்கர் ராம் மோகன் ராவ் (அமிகாஸ் கிரியேஷன்ஸ்) படத்தை தயாரித்திருக்கின்றனர்
நிக்கேத் பொம்மி ரெட்டி கேமரா திருப்பதி, மும்பை நகரங்களை சுற்றி காட்டுகிறது.
குபேரா –
கோடீஸ்வரன் மட்டுமல்ல, பிச்சைக்காரனுக்கும் இவ்வுலகில் உயிர் வாழ சம உரிமை உள்ளது என்று மறைமுகமாக கம்யூனிஸம் பேசுகிறது படம்.
நடிப்பு: தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷரப், திலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, சுனைனா, ஹரிஷ் பரேடி
தயாரிப்பு: சுனில் நரங் ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி), புஷ்கர் ராம் மோகன் ராவ் (அமிகாஸ் கிரியேஷன்ஸ்)
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: நிக்கேத் பொம்மி ரெட்டி
இயக்கம்: சேகர் கம்முலா
பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா, ரியாஸ் கே ஹாமத்