டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் தக்லைஃப்.

தொழில்நுட்பம் மூலம் இளம் வயதுத் தோற்றம், அதன்பின் இப்போதைய தோற்றம் அவற்றிற்கடுத்து தற்காப்புக்கலைஞர் தோற்றம் என வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார் கமல்.மனைவி அபிராமி, துணைவி த்ரிஷா என அகவாழ்க்கையும் இருக்கிறது.எல்லாவற்றிலும் கமல் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.

கமலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கும் சிம்பு,துள்ளலும் துடிப்புமாக நெருப்பு போல் இருக்கிறார்.கமலுக்கு இணையாக நடித்திருக்கிறார் சில இடங்களில் அவரை விஞ்சுமளவுக்கு நடித்து நற்பெயர் பெறுகிறார்.

கமலின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமியின் பாத்திரப்படைப்பும் அதில் அவர் நடிப்பும் வரவேற்பையும் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.

த்ரிஷாவின் கதாபாத்திரம் இளைஞர்களை ஈர்ப்பதற்கென்றே படைக்கப்பட்டது போல் இருக்கிறது.அவரும் அதை உணர்ந்து அதற்கேற்ற திறமை காட்டியிருக்கிறார்.

கமலின் அண்ணனாக நடித்திருக்கும் நாசர்,மகேஷ்மஞ்ச்ரேகர், ஜோஜுஜார்ஜ்,அசோக்செல்வன்,ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் இருக்கிறது.அதனால் பயன் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் படத்தைப் பாதுகாத்து நிற்கின்றன.வழக்கம்போல் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாமல் கோபமூட்டுகிறார்கள். பின்னணி இசையில் தன் இருப்பைக் காட்டியிருக்கிறார்.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லனுபவம் தரக்கூடியவையாக அமைந்திருக்கின்றன.நவீன தொழில்நுட்ப உதவியால் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் நன்று.

கமலின் இளவயது சிம்புவின் சிறுவயதில் படம் தொடங்குகிறது.அஞ்சுவண்ண பூவே பாடல் இதமாக இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் படத்தைத் தூக்கி நிறுத்தும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.ஆனால் அம்மாதிரி நடக்காமல் நேரெதிர்த் திசையில் பயணிப்பது போல் இருக்கிறது.அடுத்து இதுதான் நடக்கும் என்று அனைவரும் யூகிக்கக்கூடிய காட்சிகள் தொடர்ந்து வருவது பலவீனம்.கமலின் இல்வாழ்க்கை தொடர்பான காட்சிகள் சர்ச்சைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

முரடர்கள் பெயரில் உணர்வுப்பூர்வமான கதைசொல்ல முயன்றிருக்கிறார்கள். மணிரத்னம் கமல்ஹாசன் ஆகியோரைக் காட்டிலும் சிம்புவுக்கு இந்தப்படம் பலமாக அமைந்திருக்கிறது.

– வெற்றிச்செல்வன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.