உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்க்கையைப் படமாக்குவதற்குப் பெரும் துணிவு வேண்டும்.ஏனெனில் அது மிகப்பெரும் கடல்.அதில் எந்துத்துளியைப் படமாக்குவது என்கிற கேள்வி வரும், திகைத்துப் போவோம்.அந்த சவாலை எதிர்கொண்டு திருக்குறள் இயற்றியது மட்டுமின்றி அவர் ஒரு போராளியாகவும் இருந்தார் என்கிற விசயத்தையும் சொல்லியிருக்கிறது திருக்குறள் திரைப்படம்.
திருக்குறள் இயற்றப்படுகிற நேரத்தில் அதற்கான மதிப்பு கிடைக்கவில்லை என்பதையும் அதைத்தாண்டி அதை உருவாக்கிக் கொண்டிருப்பது ஒருபுறம், மக்களைக் காக்கும் யுத்தத்தில் பங்கு என திருவள்ளுவர் வாழ்க்கை இருந்தது எனச் சொல்கிறது இந்தப்படம்.
திருவள்ளுவராக நடித்திருக்கிறார் கலைச்சோழன். திருவள்ளுவராகவே மாறியிருக்கிறார் என்று சொல்லலாம்.எல்லா இடங்களிலும் பொறுப்பாக நடித்து அந்த மாமனிதர் பெருமையைக் குலைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திருவள்ளுவரின் மனைவி வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, புதுமுகம் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு அளவாக நடித்திருக்கிறார்.நல்ல வரவேற்பையும் பெறுகிறார்.
பரிதியாக நடித்திருக்கும் குணாபாபு, பவளக் கொடியாக நடித்திருக்கும் பாடினிகுமார்,மாடத்தியாக வரும் சுகன்யா,சங்குமாறனாக இருக்கும் சந்துரு, பாண்டிய மன்னர் ஓஏகே சுந்தர்,நக்கீரர் சுப்பிரமணிய சிவா,பெருந்தலைச் சாத்தனார் கொட்டாச்சி,குமணனாக நடித்திருக்கும் அரவிந்த் ஆண்டவர்,நன்னனாக வரும் கார்த்தி, பரிதியின் தோழன் யாசர், போர்க்கருவிகளை உருவாக்கும் குழுவில் இருக்கும் நாற்காலி கார்த்தி ஆகியோர் நடிப்பும் நன்று.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு இசைவு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் நம்மைக் கூட்டிச் செல்ல விழைந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்க்கு ஒரு நல்வாய்ப்பு இந்தக் கதைக்களம்.நீரோடைகள், பச்சைவயல்கள் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்புதான் அது.அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தப்படத்துக்கு நாம் தான் முதுகெலும்பு என்பதை உணர்ந்து கலை இயக்குநர் சுரேஷ் கலேரி மற்றும் உடைவடிவமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.அதனால் அந்தக் காலகட்டம் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.
திருவள்ளுவர் என்கிற கடலைக் கையிலேந்தி பருகக் கொடுக்கும் சவாலை அதாவது கதை,திரைக்கதை,வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றிருக்கும் செம்பூர் கே.ஜெயராஜ் அதைத் திறம்படச் செய்திருக்கிறார்.
காமராஜ், காந்தி ஆகியோர் வாழ்க்கைக்கதைகளைப் படமாக்கிய பாலகிருஷ்ணன்,திருவள்ளுவரையும் திரையில் வடித்திருக்கிறார்.திருத்தமாய் இருக்கிறது.
– இளையவன்