சமுதாயத்தின் நடுத்தட்டில் இருக்கும் மக்கள் வாழ்க்கை குறித்து கதை எழுத நினைக்கும் எழுத்தாளர், அதற்காக நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி அறிய முனைகிறார்.அந்தப் பயணத்தில் அவருடைய முந்தைய கருத்துகள் முற்றிலும் உடைகின்றன.அவை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி.
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் காளி வெங்கட்.இது திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்று நினைக்காமல் நிஜமான நடுத்தரக் குடும்பத்தலைவராகவே வாழ்ந்திருக்கிறார்.அவருடைய உடல்மொழியும் வசன உச்சரிப்பும் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்ரியன், மகனாக நடித்திருக்கும் கிஷோர், மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர் ஆகிய மூவருமே நடுத்தர குடும்பத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
கீதா கைலாசம் என்றாலே நினைவுக்கு வரும் கதாபாத்திரத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்புப் பெறுகிறார். அர்ச்சனா, சுனில்சுதா, சாம்ஸ், மதுமிதா ஆகிய நடிகர்களும் தங்கள் பாத்திரமுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளராக நடித்திருக்கும் சத்யராஜ், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்தப் படத்தையும் நகர்த்திச் செல்கிறார்.அவருடைய அனுபவ நடிப்பும் திரை இருப்பும் படத்துக்குப் பெரும்பலம்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி.கே,பிரமாண்ட வீடுகள் போன்ற பரந்த வெளிகள் இன்றி நடுத்தர மக்கள் வாழ்க்கையில் கிடைக்கும் குறுகிய வெளிகளிலும் தன் இருப்பை முன்னிறுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
சதீஷ்குமார் சமுஷ்கியின் படத்தொகுப்பில் நடுத்தட்டு மக்களின் வாழ்வியல் வரைபடம் இருக்கிறது.சில இடங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கத்தரி போட்டிருக்கலாம்.
கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்களத்திற்கும் திரைக்கதைக்கும் ஏற்ப அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திகேயன் மணி.மேல்தட்டு மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் செய்யும் வேலைகளைச் சாகசம் என்று சொல்லிக் கொள்வார்கள்.அதேநேரம், நடுத்தட்டு மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே பெரும் சாகசம் என்பதை ஏகப்பட்ட எடுத்துக் காட்டுகளுடன் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.
– இளையவன்