பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை தனது தனித்துவமான மனித நேயத்தை நிரூபித்துள்ளார்.

அவரின் தீவிர ரசிகையான ராஜேஸ்வரி என்கிற பெண் தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற தனது ஊரிலிருந்து சைக்கிளிலேயே தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்துக்கு வந்தார்.  

இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
ராஜேஸ்வரியை இதயம் நெகிழ்ந்த  அன்புடன் வரவேற்றார். அவர் காட்டிய உண்மையான அன்பையும், தனது கனவை அடைவதற்காக எடுத்த கஷ்டத்தையும் கண்டு உருகிய சிரஞ்சீவி, அந்த சந்திப்பை ரசிகையின் வாழ்நாள் நினைவாக மாற்றினார். அந்த நேரத்தில் ராஜேஸ்வரி சிரஞ்சீவிக்கு ராக்கி கட்ட, அவர் ரசிகைக்கு பாரம்பரிய புடவையை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினார்.

அத்தோடு நின்றுவிடாமல்  சிரஞ்சீவி, வறுமையால் சிரமப்படும் ராஜேஸ்வரியின் இரு குழந்தைகளின் கல்வி பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு, அவர்களின் கல்வி பயணத்துக்கு துணையாக இருப்பதாக உறுதி அளித்தார்.
இந்த அன்பான செயல் சிரஞ்சீவியின் மனிதாபிமானக் குணத்தை மறுபடியும் வெளிப்படுத்தியது. அளவிட முடியாத புகழையும், உயர்ந்த நிலையையும் அடைந்திருந்தும், எப்போதும் தாழ்மையுடனும், ரசிகர்களை குடும்பத்தினராகவே கருதுவதும் அவரின் அன்பு  தனிச்சிறப்பாகும்.

திரையில் அவர் மெகா ஸ்டார், ஆனால் திரைக்குப் பின்னால் அவர் உண்மையிலேயே தான் ஒரு ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் இன்னும் கூட நிறையச் செய்யலாம். நடிகர் சூர்யா அகரம் பவுன்டேஷன் என்று ஆரம்பித்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருவது போல, தனது சிரஞ்சீவி சேரிட்டி பவுன்டேஷன் மூலம் எண்ணற்ற தனது ஏழை ரசிகர்களின் குழந்தைகள் கல்வி கற்க அவரும் முன்வரலாம்.

வருவாரா ? 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.