கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சிறை. இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு காவல்ரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார்.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிறை படம் விக்ரம் பிரபுவின் 25 ஆவது படம்.
2012 ஆம் ஆண்டு முதல்படம் கும்கி வெளியானது.13 ஆண்டுகளில் 25 ஆவது படத்தைத் தொட்டிருக்கிறார்.
அவருடன் ஓர் உரையாடல்…
1.சிறை படம் குறித்து…
டாணாக்காரன் இயக்குநர் தமிழ்,அவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடித்தேன்.அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.அவர், இந்தக் கதையை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.இது காவல்துறை அதிகாரியாக நான் நடிக்கும் நான்காவது படம்.முந்தைய படங்களிலிருந்து என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தைப் பார்ப்பீர்கள்.இதில் நடிக்க 15 கிலோ எடை அதிகரிச்சேன்.காவல்துறைக்குள்ளேயே இருந்து ஊறியவன், அவன் மனநிலை, அவன்
மற்றவங்களை எப்படிப் பார்க்கிறான் ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.
2.தயாரிப்பாளர் மகனும் படத்தில் இருக்கிறாரே?
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமார் மகன் எல்.கே.அக்ஷய் குமார் இதில் நடித்திருக்கிறார். கமர்சியல் படத்தில் அறிமுகப்படுத்தம்ணு நினைக்காம ஒரு நல்ல படத்துல அறிமுகமாகணும்னு நினைச்சு நடித்திருக்கிறார்.அர்த்தமுள்ள இந்தக் கதையில ஏற்றிருக்கும் வேடத்துக்காக ரொம்ப உழைச்சிருக்கார்.அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, இதை விட அதிகமாக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன், இதை விட இன்னும் அதிகம் இருக்கும் என்று கூறினேன். அனிஷா உள்பட இதுல நடித்திருக்கிற எல்லோருமே அருமையா நடிச்சிருக்காங்க.
3.படத்தில் உள்ள அரசியலை உணர்ந்து நடித்தீர்களா? அல்லது இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தீர்களா?
இயக்குநர் சொன்னதை வைத்து நடித்திருக்கிறேன்.இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால்,நான் தமிழின் உடல் மொழியை பின்பற்றினேன். அவரிடமிருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன்.நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும்,என் இரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.
4.இது உங்கள் 25 ஆவது படம்.அதுகுறித்து.?
என்னுடைய 25 ஆவது படம், 2025 ஆவது வருடம் 25 ஆம் தேதி வெளியாகுது.மகிழ்ச்சியா இருக்கு.கும்கியில இருந்து சினிமா
வாழ்க்கையைத் தொடங்கினேன்.அதுக்குள்ள காலம் வேகமா ஓடியிருக்கு. சினிமாவுக்கு வந்து 13 வருடம் ஆச்சு. நடுவுல கோவிட்ல 2 வருடம் போயிடுச்சு. ஆரம்பத்துல இருந்தே,என் படங்கள் கமர்ஷியலாகவும் இருக்கணும், அதே நேரத்துல நல்ல கதையும்
சொல்லணும். ஒரு அனுபவமாகவும் இருக்கணும்னு நினைச்சுதான் படங்களை ஒப்புக்கொள்வேன்.சில நேரங்களில், என் விருப்பத்தை மீறி சில கட்டாயத்துக்குள்ள விழுந்திருக்கேன்.எனக்கு இருக்கிற அழுத்தம் சினிமாவுல மூன்றாவது தலைமுறை நடிகன் அப்படிங்கறதுதான். தாத்தா (சிவாஜி கணேசன்) படங்கள் பண்ணின வேகத்துக்கும், அப்பா (பிரபு) படங்கள்ல நடிச்ச வேகத்துக்கும், நான் இப்ப பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அப்படித்தான் சினிமாவும் வளர்ந்திருக்கு. இந்த நேரத்துல 25 படங்களை கடந்திருப்பது பெரிய விசயம் என்றுதான் நான் பார்க்கிறேன்.
5.படங்களைத் தேர்வு செய்வது எப்படி?
கொரானாவுக்கு பிறகு பார்வையாளர்கள் வெவ்வேறு விதமான கதைகளை விரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. நல்ல கதைகளைத் தேடறாங்க. அது ஒரு வகையில நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சினிமா துறைக்கும் நல்ல விசயம். இதைத்தான் நான் ஆரம்பத்துல இருந்தே முயற்சி பண்ணிட்டிருந்தேன். அது இப்ப நடக்குது. க்ரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன்? என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே என்று சொல்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். அனைத்துக் கதைக்களங்களிலும் நடிக்கவேண்டும்.அனைத்தும் நடிப்புதான், அனைத்தும் கதாபாத்திரங்கள்தான்.அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
6.அடுத்தடுத்த திட்டங்கள்..?
அடுத்து என்ன பண்ணப்போறேன்னு கேட்டா என்கிட்ட அப்படி எதுவும் இல்லை. இன்னைக்கு இப்ப இருக்கிறதையே நான் திட்டமிடலை. நான், ரொம்ப எதையும் யோசிக்க மாட்டேன். அன்னன்னைக்கு என்ன பண்ணணுமோ? அதை மட்டுமே பார்ப்பேன். அதிகம் எதிர்பார்த்தா, அதுவே சில நேரம் ஏமாற்றமாயிடும்.சினிமாங்கறது கற்றல். சினிமாவுக்கு வந்த இத்தனை வருசத்துல நான் தெரிந்து கொண்ட விசயங்களை அடுத்தடுத்த வருடங்கள்ல இன்னும் சிறப்பா பயன்படுத்துவேன்.
– யுவராஜ்
