இளம் இணையரின் காதலுக்கு எதிரியாக சாதி,மதம்,அந்தஸ்து,பெற்றோர்,உறவினர் எனப்பலர் வருவார்கள்.காதலுக்கு எதிரியாக காதலனே வருவதுதான் மாயபிம்பம் படத்தின் கதை.
மருத்துவ மாணவரான நாயகன் ஆகாஷுக்கு நாயகி ஜானகி மீது காதல்.ஜானகியும் அவரை காதலிக்கிறார்.அதேநேரம் நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால் தவறான முடிவை எடுக்கிறார் கதாநாயகன். அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் படம்.
நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஆகாஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்.காதல் காட்சிகளில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.நண்பணின் பேச்சைக் கேட்டு செய்யும் செயலினால் ஏர்படும் விளைவுகளின் தாக்கத்தை நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ஜானகி எளிய அழகு.நடிப்பிலும் ஈர்க்கிறார்.மிகக் கடினமான உணர்சிகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தமான வேடம்.அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.அவருடைய கண்கள் அவரைத் தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகிய அனைவரும் புதுமுகங்கள் என்று சொன்னால்தான் தெரியும் எனுமளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய், கதாபாத்திரங்கள் அளவுக்கு கதைக்களமான கடலூர் மாவட்டத்தையும் பதிவு செய்திருக்கிறார்.திரையில் பார்ப்பது போலன்றி நிஜத்தில் பார்ப்பதுபோல் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன.
நந்தாவின் இசையில் பாடல்களும் கதை சொல்லிச் செல்கின்றன.பின்னணி இசையில் திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.
வினோத் சிவகுமாரின் படத்தொகுப்பு, படத்தின் தன்மையை மாற்றி உணரவைக்கும் வண்னம் அமைந்திருக்கிறது.
கே.ஜே.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரித்துமிருக்கிறார்.காதல் கதையை மையமாகக் கொண்டு படமெடுத்திருக்கிறார்.அதில் இடம்பெறும் குடும்ப உறவுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் அந்த உறவுகளை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது.அதோடு காதலை முன்னால் வைத்து மனிதர்களின் உணர்வுநிலைகளை வெளிப்படுத்தி அது எவ்வளவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் செயல்படுகின்றன என்பனவற்றையும் எளிதாக உணரும் வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பல மாயபிம்ப்ங்களை உடைக்கும் முயற்சியில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு நாயகி ஜானகி ஓர் அடையாளமாகவே மாறியிருக்கிறார்.
– இளையவன்
