பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக் பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார்.

இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது..,

என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த சோதனை 8 ஆம் அதிகாலை 3 மணி வரை நீண்டது. வீடு முழுவதும் அவர்கள் முழுமையாகச் சோதனை செய்தார்கள். அவர்கள் தேடி வந்த எந்த விஷயத்துக்கும் எனக்கு சம்பந்தமே இல்லை. எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர்கள் “Nil Seizure” என்று பதிவு செய்து சென்றார்கள்.

தேர்தல் பணம் அல்லது வேறு ஏதாவது தொடர்பாக வந்திருந்தாலும், எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தி சென்றார்கள். ஆனால் சில மீடியாவில் ஆயிரக்கணக்கான கோடிகள் கைப்பற்றப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் தவறு. நடந்ததை மட்டுமே உண்மையாக சொல்ல வேண்டும். இல்லாததை உருவாக்கி பேசுவது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இப்படி வரும் செய்திகள் அவர்களையும் பாதிக்கிறது.

இதற்கு முன்பே IT நோட்டீஸ் வந்தது. அதற்கு என் ஆடிட்டரும், வழக்கறிஞர்களும் பதில் அளித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். அந்த நிலைமையிலேயே மீண்டும் சோதனை நடந்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் நேரம் என்பதால் இப்படிச் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் முழுமையாக பதில் அளித்தோம். அவர்கள் திருப்தியுடன் சென்றார்கள். என்சிபி மற்றும் தேர்தல் அதிகாரிகளும் வந்து சோதனை செய்தார்கள். அவர்களும் எதுவும் இல்லை என்று கூறி சென்றார்கள். நான் எதையும் மறைக்கவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் சட்டப்படி தான் இருக்கிறது.

டெல்லி வழக்கு குறித்து பேச வேண்டுமென்றால், அது தற்போது கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நான் சட்டப்படி அந்த வழக்கை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். என் லீகல் டீமும் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கு நீண்டு கொண்டே இருக்கிறது. இது கோர்ட்டில் நடக்கும் ஒரு சாதாரண நடைமுறை. தீர்ப்பு வந்தவுடன் நான் நேரடியாக உங்களிடம் பகிர்வேன். அதற்கு முன்பே பெரிய தொகைகள் கூறி என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல. என் தொடர்புடைய எந்த இடத்திலும் ஒரு கிராம் கூட தவறான பொருள் கிடைக்கவில்லை. நான் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அரசியலிலிருந்து விலகி இருக்கிறேன். யாருக்கும் நான் பண உதவி செய்யவில்லை. பாண்டிச்சேரி அல்லது சென்னை என்று எங்கும் நான் பணம் கொடுத்ததில்லை. நான் என் குடும்பம், வேலை, மற்றும் கோர்ட் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த சில நாட்களில் பல துறைகள் என்னை விசாரித்துள்ளன. அதில் IT துறை மட்டும் முறையாகவும் தெளிவாகவும் செயல்பட்டது. மற்ற துறைகளும் வந்து சோதனை செய்து எதுவும் இல்லை என்று கூறி சென்றன. என் வீட்டில் சாதாரண குடும்ப செலவுக்கான சுமார் 40,000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதற்கும் மேலாக எந்தப் பெரிய தொகையும் இல்லை. இதை தயவுசெய்து சரியாக பதிவு செய்யுங்கள்.

தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என்னை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம். நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். என் நிலையை புரிந்து கொண்டு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம். நான் தற்போது என் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் என் தயாரிப்பில் உருவாகும் “மங்கை” மற்றும் “இறைவன் மிகப்பெரியவன்” திரைப்படங்களை உங்களிடம் கொண்டு வருகிறேன். நன்றி.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.