ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) .

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.

ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘நோவா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாயகி ரைசா வில்சன் கூறும்போது, “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன்.

ஆக்சன், த்ரில்லர், சயின்ஸ் பிக்சன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இதுவரை நான் இந்த மாதிரி கதையில், கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதனாலேயே இந்தக் கதை எனக்குப் பிடித்து விட்டது.

கேரளாவில் உள்ள மறையூர் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அனுமதி கிடைப்பதற்கே சிரமமான சந்தன மரக் காடுகளுக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், பெரும்பாலான நேரம் பனி மற்றும் மழை, வனவிலங்குகளின் அச்சுறுத்தும் சத்தம், சேறும் சகதியுமான பாதைகள் என அந்த பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் அங்கே போவதற்கு முன்பு ரொம்ப எளிதாக படப்பிடிப்பு நடக்கும் என்று நான் நினைத்துக் கொண்டு சென்றேன். இவ்வளவு சிரமங்கள் இருக்கும் என எனக்குத் தெரியாது. இதற்கு முந்தைய படங்களில் எனக்கு அப்படி ஏற்பட்டதும் இல்லை.

ஆனாலும் தாமதம் இன்றி குறித்த காலகட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டோம்.

அதுமட்டுமல்ல இயக்குநர் மைலோ படப்பிடிப்புத் தளத்தை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தார்.

அதனால் இந்த சிரமங்கள் பெரிதாகத் தெரியவில்லை. தனது முதல் படத்திலேயே இவ்வளவு சிக்கலான ஒரு கதையை அவர் எடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கு நிறைய தைரியம் வேண்டும். நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். அதனால் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

பெரும்பாலான நேரம் மழை பெய்ததால் ஈரமான உடையுடனே படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்திருப்பேன். குறிப்பாக நான் நடித்த ஆக்சன் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. விமல் ராம்போ மாஸ்டர் இதற்கான பிரத்தியேகமான பயிற்சி அளித்தார். அது மட்டுமல்ல, நான் ஏற்கனவே “மிஸ்டர் எக்ஸ்” படத்திற்காக சண்டைக் காட்சிகளில் பயிற்சியெடுத்து கொஞ்சம் பழகி இருந்தேன். அதனால் “நோவா” படத்தில் நடிக்கும்போது அது எளிதாக இருந்தது.

ஆர்யாவுடன் இணைந்து நான் நடித்துள்ள “மிஸ்டர் எக்ஸ்” படம் வெளியாகி எனக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளது.

“எப்ஐஆர்” படத்திற்குப் பிறகு இயக்குநர் மனு ஆனந்த்தின் டைரக்ஷனில் நான் நடித்த இரண்டாவது படம் . “பியார் பிரேமா காதல்” படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய படங்கள் ஒப்பந்தமானேன். அதில் சில படங்கள் படப்பிடிப்பு முடிந்தும்விட்டன ஜி.வி பிரகாஷுடன் “காதலிக்க யாருமில்லை” என்கிற படத்தில் நடித்தேன். 95 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 2019-ல் ஆரம்பித்த அந்த படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை எனத் தெரியவில்லை. எதனால் இப்படி நடக்கின்றது என்றும் எனக்கு புரியவில்லை. அதனாலேயே ஒரு இடைவெளி விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இதே போலத்தான் “சேஸ்” என்கிற படமும் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. அதே சமயம் “மிஸ்டர் எக்ஸ் வெளியாகிவிட்டது. தற்போது “நோவா” வெளியாக உள்ளது இப்படி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்போது நிச்சயமாக எனக்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் ரைசா வில்சன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.