என்னைப்போல் சிவாஜி கணேசனுக்கும் உலக சந்தை என்கிற ஒன்று இருந்திருந்தால் அவரும் நானும் ஒன்றுதான்” – ஆஸ்கர் விருதுகள் வாங்கிய, உலகம் போற்றும் ஒப்பற்ற நடிகன் மார்லன் பிராண்டோ.

ஜூலை 21., 2001ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமானபோது அவரது இறுதிப்பயணத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா கலைஞர்களும் தங்கள் தோளில் தூக்கி சுமந்து போனதை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. அன்றைய தேதியில் சாட்டிலைட் எண்ணிக்கை வெகு சொற்பம். யூடியூபர் என்கிற இனம் இல்லவே இல்லை. அந்த இறுதி ஊர்வலத்தின் நிஜமான அழுகுரல்கள் தமிழகம் முழுக்க எதிரொலித்தன.
அந்த நடிகர் திலகத்தின் 25வது நினைவுநாள் இன்று. நிச்சயமாக சம்பிரதாயத்துக்காக நினைவு கூறப்படுகிற மனிதர் அல்ல அவர். அவரது 250 வது நினைவு தினத்திலும் யாரோ ஒருவர் அவர் குறித்து… நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே” என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதவே செய்வார்.

மூன்று தினங்களுக்கு முன்பு 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு சிறந்த நடிகர் விருதுபெற்ற நடிகர்களின் ரசிகர்களும் விருது பெறாத நடிகர்களும் வழக்கம்போல் சமூக வலைதளங்களின் வார் ரூம் வாயிலாக போர் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா வருடங்களிலும் நடக்கிற அக்கப்போர் தான் அது. சொந்த செல்வாக்கு, அரசியல் லாபி, தனித்த கவனிப்பு போன்றவற்றால் இன்று சிலர் சிறந்த நடிகர் விருதுகளை ஜஸ்ட் லைக் தட் தட்டித்தூக்கி விடுகிறார்கள்.

200 படங்கள் வரை நடித்து அதில் சுமார் 50 படங்களிலாவது அக்கதை நாயகனாகவே கூடுவிட்டு கூடு பாய்ந்த நடிகர் திலகத்துக்கு ஒருமுறை ஒரே ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்பட்டதில்லை எங்கிற கொடூர உண்மையை இந்த வார் ரூம் தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா”?தன் காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து, கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகத் தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வந்தபோதிலும், அவருக்கு ஒரு தேசிய விருது வழங்க்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்? எத்தனை பெரிய வெட்கக்கேடு??இந்திய தேசிய விருதுகளின் கதை 1954ல் துவங்குகிறது. சிவாஜி தன் “பராசக்தி”யை “52ல் நிரூபிக்கிறார். அவ்விருதுகள் இன்றுவரை ஓராண்டாவது இடைவெளிவிட்டு வழங்ககப்படும் வகையில் சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதே சிவாஜியுடன் தான் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சரித்திரப்பிழை அங்கேயே தொடங்கி விடுகிறது.

அந்த முதல் கோணல் அவரது வாழ்நாளின் இறுதிவரை சரி செய்யப்படாமல் போனது காலக்கொடுமையன்றி வேறென்ன?இந்த சந்தர்ப்பத்தில் அமரர் எம்.ஜி.ஆர் 1971-ல் வெளியான ஒரு கமர்சியல் படமான “ரிக்ஷாகாரன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், மறைவுக்குப் பின்னராக வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதையும் பெற்றார். நடிப்புத் திறமையைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு ஈடாக இல்லை என்பதை அவருடைய ரசிகர்களே தயக்கத்துடன் ஒப்புக் கொள்வார்கள். உண்மையான நடிப்புத் திறனை மதிப்பிடுவதை விட, அரசியல் ஆதாயத்திற்காகவே இந்த இரண்டு விருதுகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டன என்பது காலம் மறுக்க முடியாத கசப்பான உண்மை.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… சிவாஜி பல காவியப் படங்களில் நடித்துக் கொன்டிருந்த அவரது 50 வருட காலச்சுற்றில் யார் யாரோ வாங்கினார்கள். ” நடிப்பில் நான் சிவாஜியின் ஒரு துளி” என்று பணிவு காட்டிய கமல் மட்டுமே சிவாஜிக்கு விருது வழங்கப்படாதது குறித்து அவ்வப்போது ஆதங்கம் காட்டியிருக்கிறார்.”52ல் “பராசக்தி”யில் தொடங்கிய பயணம் ஒரு காட்டாற்றின் பயணமேதான். சிவாஜி 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 ஹிந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 17 திரைப்படங்களில் கவுரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், கர்ணன், திருவருட்செல்வர், கப்பலோட்டிய தமிழன் போன்ற பலரை நினைத்துப் பார்த்தால், ஒரிஜினல் நபர் மறந்து உங்கள் நினைவுக்கு வருபவர் சிவாஜிதான்.

இன்று முதல் படத்தில் அறிமுகமாகிறபோதே சிலர் இமேஜ் பார்க்கிறார்கள். ஆனால் தனது மூன்றாவது படமான “திரும்பிப்பார்”லியே வில்லன் வேடத்தில் நடித்தவர் சிவாஜி. வேறு எந்தக் கதாநாயகனும் எற்கத்தயங்கும் வேடங்களில் அவர் நடித்த படங்கள் எண்ணிலடங்கா.”புதிய பறவை”யில் மனைவியை கொன்ற கொலைகாரர். “தில்லானா மோகனாம்பாள்”-ல் காதலியை சந்தேகிப்பவர், வசந்த மாளிகையில் மொடாக்குடிகாரர் என்று வழக்கமான சினிமாக் கதாநாயகர்கள் ஏற்கத் தயங்கும் வேடங்களை ஏற்று அப்பாத்திரங்களாகவே மாறிப்போனார்.

“உயர்ந்த மனிதன்”, “தெய்வ மகன்”, ” நவராத்திரி” குறிப்பாக பீம்சிங்கின் இயக்கத்தில் சிவாஜி நடித்த “பாவ மன்னிப்பு”, “பாலும் பழமும்” ,”பார்த்தால் பசி தீரும்” உள்ளிட்ட “பா” வரிசைப்படங்கள் என்று அவரது அட்டகாசமான படங்களை அவ்வளவு சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சிவாஜி நடித்த கடைசிப்படம் “பூப்பறிக்க வருகிறோம்”. ரஜினி நேரில் சென்று கேட்டுக் கொண்டதால் அவரது படையப்பா படத்தில் நடித்த சிவாஜிக்கு பிடித்த நடிகர் எப்போதுமே கமல்தான்.

சிவாஜிக்கு நடந்தது போலில்லாமல் நல்லவேளை கமல் மூன்றுமுறை தேசிய விருது வாங்கிவிட்டார்.
வாழ்க அப்பாவி தமிழ் நடிகர் சிவாஜிக்குக் கிடைக்காத தேசிய விருது.

சிவாஜிக்கு மிகவும் பிடித்த அவரது படங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
திருவிளையாடல்
கர்ணன்
நவராத்திரி
தில்லானா மோகனாம்பாள்
ராஜராஜ சோழன்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்
கவுரவம்
முதல் மரியாதை
தேவர் மகன்

–நன்றி. தினமலர் இணைய இதழ்.

Related Images: