ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பில் என்ன சாதித்தாரோ இல்லையோ ஸ்டைலாக நடித்தே மிகப் பெரும் ஜனத் தொகையை வளைத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவர்.
அதிலும் அவர் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதை ரசித்ததாலேயே அந்தக் காலத்தில் ஸ்டைலாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தவர்கள் பலர்
உண்டு. அப்புறம் அவர் நின்றால், நடந்தால் திரும்பினால் என்று எல்லாவற்றையும் ஸ்டைலாகப் பார்க்கும்படி மக்கள் ஆகிவிட்டார்கள்.
அப்படி சிறு குழந்தைகளையும் கவரும் ஸ்டைல் செய்த ரஜினிகாந்த் போனவாரம் தனது 62 வயதைக் கொண்டாடிய போது ரசிகர்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்குச் சொன்னார் “சிகரெட், மது போன்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள், அம்மா அப்பாவுடன் சேர்ந்து அவர்கள் பிறந்த நாளையும் கொண்டாடுங்கள்..”
உடனே அவரது ரசிகர் மன்றங்கள் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகளை மொத்தமாகப் போட்டு எரித்தனர். ஆனால் எங்கேயும் டாஸ்மார்க் சரக்கு பாட்டில்களைப் போட்டு எரித்த ரசிகர்களைக் காணோம். வசதியா மறந்துட்டாங்க போல இருக்கு.
இதுல இன்னொரு நியூஸூம் நொண்டியடிக்குது. அதாவது சிகெரட் பாக்கெட்டுகள் மீது ரஜினியின் படத்தைப் போட்டு எச்சரிக்கை செய்ய ரஜினியின் ரசிகர்கள் விரும்பியதாகவும், அதற்காக சிகரெட் கம்பெனிகளை அணுக இருப்பதாகவும் தகவல்.
சிகரெட் கம்பெனிக்காரர்கள் இப்படி ஒரு எதிர்பாராத அதிர்ஷடம் வருமென்று கனவிலும் நினைத்திருப்பார்களா?. ஏனென்றால் ரஜினி படம் போட்டால் சிகரெட் விற்பனை குறையுமா ? கூடுமா ? சத்தியமாகக் குறைய வாய்ப்பில்லை.
இது ரசிகர்களுக்கு ஏன் உறைக்கவில்லை. ரஜினிக்குத் தெரியும் தனது மதிப்பு என்னவென்று. கண்டிப்பாக இதுபோன்ற விஷயங்களுக்கு அவர் ஒத்துக் கொள்ளமாட்டார். ஏனென்றால் இதில் அவருக்கு பைசா பிரோயஜனமில்லை என்பது ஒருபுறம். மறுபுறம் சிகரெட் குடிப்பவர்கள் இதனால் சிகரெட் வாங்கமாட்டார்கள் என்பது ரொம்ப அபத்தமாக இருக்கிறது.
பேசாம ஒரு சேஞ்ச்சுக்கு நம்ம அரசியல் தலைவர்கள் படங்களை சிகரெட் பெட்டிகளில் போட்டால் என்ன ? நீங்க என்ன நினைக்கிறீங்க.