சமகால நாட்டு நடப்புகளை வரலாறுகளின் மூலம் தெரிந்துகொள்வதை விட இலக்கியங்கள் மற்றும் கலைவடிவங்கள் வழி அறிந்து கொள்வது அதிகம்.

நந்தன் படமும் இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில் சொல்லியிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் சாதிய ஆதிக்கம் குறித்து அரசியல் பார்வையுள்ளோர் மற்றும் செய்தித்தாள் வாசிப்போர் வாய்வழிச் செய்தி வாசிப்போர் வரை அனைவரும் அறிவர்.அதை திரையில் வீரியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

சசிகுமார் தன்னுடைய வழக்கமான பாணியை முற்றிலும் மாற்றிக் கொண்டு அம்பேத்குமார் என்கிற பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டி வியக்க வைத்திருக்கிறார்.திரைக்கதையில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் இரத்தம் கொதிக்கும் நிகழ்வுகள்.அவை திரையில் மட்டுமன்று தரையிலும் நித்தம் நடக்கிறது என்பது கொடூரமான உண்மை.

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதிபெரியசாமி,பாத்திரத்தை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்

எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், மிகப் பொருத்தமாக நடித்து சாதீய ஆதிக்கத்தின் வெறிமுகங்களைக் கண்முன் நிறுத்துகிறார்.

சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின்,ஞானவேல்,மாதேஷ்,மிதுன்,சக்தி சரவணன், சித்தன் மோகன் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு நடிகர்களை மாற்றிக் காட்டுவது மட்டுமின்றி நிகழ்வுகளையும் நிறைவாகப் பதிவு செய்திருக்கிறது.

நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

எழுதி இயக்கியிருக்கிறார் இரா.சரவணன்.

அடித்தட்டு மக்களும் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தனித் தொகுதிகளின் நிலை என்ன? அங்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் நிலை என்ன? ஆகியனவற்றை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் உட்காரப்போகிறோம் என்று ஆசையுடன் சசிகுமார் போகும் காட்சி வேதனையின் உச்சம்.

ஆள்வதற்குத்தான் அதிகாரம் தேவை என நினைத்தோம் இங்கு வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது என்கிற சொல்லின் கூர்மை நம் நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது.

திரைமொழியில் சில குறைகள் இருப்பினும் பேசாப் பொருளைப் பேசத்துணிந்ததற்காக இயக்குநரையும் அதை ஏற்றுக் கொண்டு அதற்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்த சசிகுமாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

– கதிர்

இன்னமும் ஆண்டசாதி பெருமைகளைப் பேசித்திரியும், தம்முள் ஊறிக்கிடக்கும் சாதிய அழுக்குகளை சந்தனமாய் முகர்ந்து பெருமை கொள்ளும் ஆண்டைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.

“இப்டில்லாம் எங்கே நடக்கிறது என்று கேட்பவர்களை, அங்கு கூட்டிக் கொண்டு போய் காட்டத் தயார்“ என்ற வரிகளோடு தான் படமே தொடங்குகிறது. சரியான கேஸ்டிங் அமைந்தாலே ஒரு படத்துக்கு பாதி வெற்றி. கதையும், திரைக்கதையும் அமைந்தால் மீதி வெற்றி. அந்தளவில் நந்தன் முழு வெற்றி. சசிகுமார், பாலாஜி சக்திவேல், சசியின் மனைவியாக வரும் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி மட்டுமல்ல மற்ற கேஸ்டிங்குகளும் சரியான சாய்ஸ். படத்தின் மையத்தைவிட்டு திரைக்கதை ஒரு நொடியேனும் வேறு எங்கும் பயணிக்கவில்லை.

படம் மொத்தமுமே “நாம பண்றது சரியா” என்று ஆண்டைகளையே யோசிக்கவைக்கும் காட்சியமைப்புகள் தான். ஆனால் அவர்கள் இதையும் பெருமையாகத் தான் கருதுவார்கள். (மாமன்னன் படத்தில் ஃபகத்ஃபாசில் கேரக்டரை கொண்டாடியவர்களாயிற்றே).

திருந்துவார்களா தெரியவில்லை, அட்லீஸ்ட் இது போன்ற அவலங்களைத் தான் நாம் காலகாலமாக செய்து கொண்டு வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவாவது “நந்தன்” போன்ற அடிகள் விழவேண்டும். அடி மேல் அடி அடித்தால் அடுத்த தலைமுறையேனும் திருந்தும்.

#nandhan

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.