கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாடச் சென்ற போது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் சுவர்ணமுகி ஆற்றின் நீரை சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.

இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி சிவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வேளையில் அந்த சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவன். அதைக் கண்ட திண்ணனார், ஒரு பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன் பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து அந்த வாயு இலிங்கத்தின் வலக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். வாயு இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெது வைப்பதற்கு முன், அந்த வாயு லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன் காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெது அந்த வாயு இலிங்கத்தின் இடக்கண்ணிருக்கும் இடத்தில் இட்டார் மற்றும் இடக்கண்ணிலிருந்தும் குருதி வழிவது நின்றது மற்றும் அப்போது சிவன் நில்லு கண்ணப்பா என மும்முறை கூறி தடுத்தருளினார்

இந்தப் புராணக் கதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் கண்ணப்பா.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை தனது நடிப்பு மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார்.ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருப்பது அவருடைய உடல்மொழியில் புலனாகிறது.

புராண காலத்துப் பெண்ணாகவே மாறியிருக்கும் நாயகி பிரீத்திமுகுந்தன், அழகிலும் நடிப்பிலும் இரசிகர்களைக் கவர்கிறார்.

மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் மோகன் பாபு,கிராத்தா என்ற வேடர் குல வீரராக மோகன்லால்,ருத்ரா கதாபாத்திரத்தில் பிரபாஸ்,சிவனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால்,விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக சரத்குமார்,சந்துடு என்ற கதாபாத்திரத்தில் சம்பத்ராம் ஆகியோரோடு மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என படத்தில் ஏராள நடிகர்கள்.எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் உழைப்பில் காட்சிகள், கண்களிடம் அழகைக் கொண்டுவந்து சேர்க்கிறது.

இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் படத்தின் தன்மை வெளிப்படுகிறது.

படத்தொகுப்பாளர் ஆண்டனி, எதை எடுப்பது? எதை விடுவது? என்று தடுமாறியிருப்பது படத்தில் தெரிகிறது.

எல்லோரும் அறிந்த கதையை அதன் தன்மை மாறாமல் கொடுப்ப்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் முகேஷ் குமார்சிங்.

– இளையவன்

இந்த பதினோரு வருட இந்தி-இந்திய-இந்துத்துவா கொள்கை கொண்ட ஒன்றிய அரசின் ஆட்சியில் சினிமாத் துறையில் இது போன்ற இந்துத்துவ கருத்தியலை வளர்த்தெடுத்து நிறுவுவதற்காகவும், மக்களிடையே எனனதான் படித்திருந்தாலும் மீண்டும் மூட நம்பிக்கைகள், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற வற்றில் மூழ்கித் திளைக்க அவற்றை நிஜம்போல காட்டவும், பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு பிரம்மாண்டமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் புதிதாக வந்திருப்பது தான் இந்த கண்ணப்பா. 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.