தேன்கூடு

“திரைப்படங்கள் பொழுதினைப்போக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் ’தேன்கூடு’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர்

புகழேந்தி ஆகியோர் பேசினார்கள்.ஈழப்போர் ஏற்பட்ட காரணம், இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு தொடரவேண்டும் என்பதைச் சொல்லும் படமாக தேன்கூடு படத்தை இயக்கியிருக்கிறார் இகோர். இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை கமலாத் திரையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் ஜன நாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குனர் அமீர், “சிறிய வயதில் இது குடும்பத்துடன் பார்க்கவேண்டிய பொழுதுபோக்குத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வந்த படங்களைப் பார்த்திருக்கிறேன்…முதல்முறையாக ஈழத்தமிழ்த் திரைப்படம் என்கிற முத்திரையைத் தாங்கி வரும் படமாக தேன்கூட்டினைப் பார்த்துப் பிரமிக்கிறேன். 2006 லேயே நானும் இயக்குனர் சீமான் அவர்களும் ஈழப்போரினைப் பதிவு செய்யும் படம் ஒன்றினை இயக்க முற்பட்டோம் ..அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போதே ஈழப்போர் உச்சக்கட்டத்தை அடைந்து முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறிவிட்டது. இன்று வரை அப்படி ஒரு படம் இயக்கவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியுடனேயே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். ஈழாப்போரினை அடிப்படையாகக் கொண்டு ’தேன்கூடு’ எடுத்ததில் இகோருக்கு எனது பாரட்டுகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இங்கே தமிழ் ஆர்வலர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், ஆனால் தமிழர் ஆர்வலர்கள் மிகவும் குறைவு. தமிழ்மொழியினை மட்டும் காப்பாற்றி விட்டு தமிழர்களை ஒழித்துக் கட்டப் புறப்படுவது என்ன நியாயம்.

கனடா போன்ற நாடுகளில் திரைப்பட சூப்பர் ஸ்டார்களைக் கொண்டாடிய நிலை இன்று மாறிவிட்டது. இன்று அவர்களின் ஒரே சூப்பர் ஸ்டார் சீமான் தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இழந்த சுகங்களை மீட்டெடுப்பதற்கு தகுதிபெற்ற சிலரில் சீமானையும் ஒருவராகப் பார்க்கின்றனர்.

ஈழப்போரை மையமாக வைத்தும் திலீபனின் தியாகத்தை மையமாக வைத்தும் சுபரமணிய சிவாவும் ஆனந்த் எனபவரும் படங்களை இயக்கிக் கொண்டுள்ளனர். போராளிகள் சிலரை அழித்து விட்டால் ஈழப்போரே முடிந்து விட்டதாக சிங்கள் அரசு நினைக்க வேண்டாம் , உணர்வுகளை யாராலும் அழிக்கமுடியாது” என்று பேசினார்.

உன்னுடைய கோவணத்தை உருவுபவன் கைகளை வெட்டி அதனை மீட்டு உடுத்து… நிர்வாணமாக வேணும் போராடலாமே அன்றி அவனிடம் கெஞ்சி உன் கோவணத்தை மீட்காதே என்கிற காசி ஆனந்தனின் கவிதை வரிகளுடன் தனது பேச்சினை ஆரம்பித்த தமிழச்சி தங்கபாண்டியன், “ இன்றைய சமகால வெறும் கேளிக்கை சினிமாக்களுக்கு மத்தியில் தமிழனின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் படமாக ’தேன்கூடு’ எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஈழவரைபடத்தை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள் அதுதான் ஒவ்வொரு தமிழர் மனதிலும் பச்சைகுத்தப்பட்டிருக்கிறதே! அதில் வரும் சில உணர்ச்சிப் பிழம்பான வசனங்களை தணிக்கை அதிகாரிகள் நீக்கியிருக்கிறார்கள் என்று வருத்தப் படத்தேவையில்லை. படம் முழுவதும் வரும் வசனங்களை நீக்கினாலும் இந்தப் படத்தினை மெளனப் படமாகவே வெளியிடலாம்… நிச்சயம் அதன் கடமையைச் செய்யத்தான் போகிறது. படத்தின் கதா நாயகனாக நடித்திருப்பவர் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதும், அடுத்த தலைமுறைக்கு ஈழப்போரினை முன்னெடுத்தச் செல்ல தனது கர்ப்பிணி மனைவியிடம் கேட்டுக் கொள்வதும் தேன்கூடு படத்தின் சிறப்பம்சங்கள் ..” என்று பேசினார். தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே துரோகம் இழைத்து விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டிருப்பவர்கள் தமிழனாகவோ தமிழச்சியாகவோ இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து சிலி நாட்டுக் கவிஞன் பாபிலோனிருடா வீட்டில் ஏதேனும் மறைந்து கிடக்கிறதா என்று ராணுவம் தேடும் போது வீடு முழுவதும் தேடிக்கொள்ளுங்கள் இங்கு இருக்கும் ஒரே அபாயகரமான பொருள் கவிதைகள் மட்டுமே என்று அந்தக் கவிஞன் கூறியதை நினைவு கூர்ந்த தமிழச்சித் தங்கபாண்டியன் சிங்களவர்களைப் பொறுத்த வரையில் ஒரே அபாயகரமான பொருளாக சீமானும் இந்தப் படமும் இருப்பார்கள் என்று கூறித் தொடர்ந்து போராளி கேப்டன் வான்மதி போர்க்களத்தில் செத்து மடிய சில மணித்துளிகளுக்கு முன்பு எழுதிய கவிதையை வாசித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆரம்ப காலத்தில் பல வியூகங்களை வகுத்துக் கொடுத்ததாகக் கருதப்படும் கவிஞர் காசி ஆனந்தன் பேசும் போது அல்ஜீரிய விடுதலைப் போராளி அலி எனப்படும் மாவீரனின் போர்க்களத் தியாகங்களை தன் உடம்பில் வெடிகுண்டினைக் கட்டிக்கொண்டு எதிரிப்படைகளை அழிக்கும் அவனின் போர்த்திறன் அடங்கிய படத்தினை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்குப் பலமுறைப் போட்டுக்காட்டியிருப்பதை நினைவு கூர்ந்த அவர் , அதனடிப்படையிலேயே கரும்புலிகள் படைப்பிரிவு தோற்றுவிக்கப்படதாகவும் தெரிவித்தார். அத்துடன் தென்னமெரிக்க மிதவாதி விடுதலைப்போராளி சிறந்த பேச்சாளர் பிக்கோ எதிரிகளால் அடித்துக் கொள்ளப்படும் காட்சிகள் அடங்கிய திரைப்படத்தையும் , உமர்முக்தர் போன்ற போட்டுக்காட்டிய பிரபாகரன் தனது போரளிகளுக்கு திரைப்படங்களைப் போட்டுக்காட்டி உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பினார் என்றார். கல்கியின் பொன்னர் சங்கர், கல்லுக்குள் ஈரம் போன்ற நூல்களும் மாசேதுங், லெனின் போன்றோர் எழுத்துக்களும் அத்துடன் சிங்கள் அடக்குமுறைகள், போராளிக்கானத் தேவை ஆகியவற்றுடன் திரைப்படங்களும் சேர்ந்து தான் பிரபாகரனை உருவாக்கின என்றார்.

மேலும் பேசிய அவர், “ ஊடகத்தைப் பயன்படுத்தி உணர்வுகளையும் எழுச்சியினையும் ஊட்டினாரோ அதே உணர்வுகளைக் கொடுக்கும் படமாகத் தேன்கூடு எடுக்கப்பட்டிருக்கிறது. 75 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு மிகுந்த வரவேற்பினைக் கொடுத்திருக்கிறார்கள் அதற்குத் தமிழகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிலை மாறி இன்று ஈழப்போரினை விளக்கும் படங்களைத் தமிழ்த் திரையுலகினர் எடுத்துக் கொண்டிருப்பதால் ஈழத்தமிழர்கள் இன்று தமிழக்க் கலையுலகிற்குக் கடமைப்பட்டவர்களாகிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஈழ வரைபடத்தை வரைந்தவர் அன்றைய நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சிபா ஆதித்தனார் – இந்தியர், 1963 இல் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த இந்தியாவின் முதல் ஆளுனர் ராஜாஜி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இலங்கைத்தமிழர்கள் அங்கு சென்று குடியேறியவர்கள் அல்ல மாறாக அந்த மண்ணின் மைந்தர்களே என்று பேட்டியளித்தார். 1984 இல் பாராளுமன்றத்தில் வைகோவின் தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து உரையாற்றிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும் அதே கருத்தைத்தான் வலியுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் ஈழ வரைபடமும் , ஈழப்போர் சார்ந்த வசனங்களும் இன்றைய இந்திய அரசால் தடைசெய்யப்படுவது ஒரு அடக்குமுறையே… தமிழர்களை அழித்தார்கள் போராளிகளை அழிக்கமுடியாது ஈழம் மலரும் “ என்று பேசினார்.

முத்தாய்ப்பாக உரையாற்றிய செந்தமிழன் சீமான், “கலையும் இலக்கியமும் மக்கள் உணர்வுகளைப் பதிவு செய்யும் ஊடகங்கள் என்கிற மார்க்ஸ்ஸின் கூற்றை அப்படியே பின்பற்றியவர் பிரபாகரன். பேச்சுக்களும் – திரைப்படமும் இராணுவத்தின் பலம் மிக்க படைப்பிரிவுகள் என்று அவர் கருதினார். எமது இனத்தின் விடுதலைப்போரினைப் படமாக எடுக்க வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். ஆணிவேர், எல்லாளன் போன்ற படங்கள் அவர் விருப்பப்படி எடுக்கப்பட்ட படங்களே! பிரேவ் ஹார்ட் என்ற பட்த்தை வீர நெஞ்சம் என்கிற பெயரில் தமிழில் அனைவரும் பார்க்கச் செய்தார் அவர். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கினைப் போன்று தேன்கூடு படத்தினை எடுத்திருக்கிறார். இகோர் தமிழகத்தின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க என்றால் மிகையாகாது.

584 இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை அரசு இந்தியாவிற்கு நட்பு நாடு என்றால் இந்தியா எனக்குப் பகை நாடே! தமிழ் நாடு என் நாடு இந்தியா எனது பக்கத்து நாடு என்கிற நிலைமை வந்துவிட்டது. இந்த நிலைமை நீடிக்காமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கைகளில் இருக்கிறது. அமெரிக்க, சீன படங்களை இந்தியாவில் திரையிடமுடியும் கேட்டால் Globalization என்பார்கள் ஆனால் நம் நாட்டவருக்காக எடுக்கப்பட்ட நமது படங்களை இங்கே திரையிட முடியவில்லை. இன்று தலைவரும் போராளிகளும் களத்தில் இருந்தால் உலகமுழுதும் இந்தப் படம் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டிருக்கும்..

எனது உணவை நானே சாப்பிடுவது போல எனது சுவாசத்தை நானே சுவாசிப்பது போல எனது விடுதலையையும் நானே போராடிப்பெற்றுத்தான் ஆகவேண்டும்.

களத்தை, காலத்தை இழந்தோம் ஆனால் பலத்தை மட்டும் என்றும் இழந்து விடக்கூடாது 5 ஆண்டுகளில் இழந்ததை 6 மாதத்தில் மீட்டெடுக்க முடியும் என்று பிரபாகரன் சொல்வது போல நாம் உறுதியுடனும் பலத்துடனும் இருந்து நமது மண்ணை மீட்டெடுப்போம். திருக்குறளைப்போல இந்தப்படம் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். தேன்கூடு நிச்சயம் வெல்லும் என்பதனை உறுதியாகச் சொல்வோம்” என்று பேசினார்.

விழாவில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி ஈழப்போரின் முக்கியமான காலகட்டங்களாக்க் கருதப்படும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் எந்த விதமான கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டாடிக்கொண்டிருக்காமல் நவம்பர் மாதத்தினை மாவீரர்கள் மாதமாகக் கொண்டாடுவதை முறியடிக்கச் செய்யும் சிங்கள அரசுக்குத் துணைபோகாமல் இருப்போம் என்றார். விழாவில் கலப்புலி எஸ் தாணு, உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், இயக்குனர் ஐந்து கோவிலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

பாடலாசிரியர் கவி பாஸ்கர் வரவேற்புரை ஆற்ற தயாரிப்பாளர் சாமுவேல் நன்றியுரை கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.