தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளே.

பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து ‘சதிலீலாவதி’ படத்தில் நடித்திருந்தார். ‘டும் டும்’மில் அத்தான் வருவாக என்று ஓட்டை வாயாடியாக நடித்திருந்தார்.

தற்போது வயதானவுடன் நாயகர்களுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா வேடத்தில் கல்பனா நடித்திருந்தார். ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த போது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துவிட்டார்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் அர்ச்சனா வேடத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இதற்காக தனது அனைத்து டப்பிங் பணிகளையும் கடந்த வாரம் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். திரையுலகினர் அனைவரும் அவரது மறைவுக்கு அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Related Images: