தேர்தல் திருவிழாவில் பெரும்பிசியாக இருப்பதால் இனி கேப்டன் சினிமாவிலெல்லாம் நடிக்க மாட்டார் என்று செய்திகள் சிறகடித்தபோது, ம்ம்ம் அப்படியெல்லாம் சொல்லப்பிடாது’ என்று நாக்கைத்துருத்தியபடி அறிவித்த படம் ‘தமிழன் என்று சொல்’.

கேப்டனின் வாரிசு சண்முகபாண்டியன் சின்ன மாலுமியாகவும், கேப்டன் ஒரு மன்னராகவும் நடிப்பதாகச் சொல்லப்பட்ட அப்படத்துக்கு சில தினங்கள் முன்பு தடபுடல் பூஜை போடப்பட்டது. ஆனால் சில தினங்களாக, அப்பட இயக்குநர் தரப்பிலும், தயாரிப்பாளர் தரப்பிலும் விசும்பல் சத்தம் வெளிவரவே, ‘அவ்ளோ பெரிய விஜயகாந்த் மீண்டும் ஹீரேவாக நடிப்பதாக சொல்லப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் என்னாச்சு என்ற கேள்வி வருமில்லையா? விசாரித்தால் பகீர் தகவல்தான் கிடைக்கிறது. அப்படம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். அருண் பொன்னம்பலம் என்ற இளைஞர் உருவாக்கிய இப்படத்தின் கதை நிஜமாகவே பிரம்மாதம். ஆதித்தமிழன் வாழ்ந்த குமரிகண்டம் கடலில் மூழ்கிவிட்டது. கதைப்படி மரைன் என்ஜினியரான சண்முக பாண்டியன் (ஜுனியர் கேப்டன்) கடல் ஆராய்ச்சி விஷயமாக சில விஷயங்களை அலசி ஆராய, அங்கு குமரிகண்டமும் அங்கு வாழ்ந்த ஆதித் தமிழர்களும் கிடைக்கிறார்கள். அதில் ஒரு மன்னன்தான் விஜயகாந்த் என்றும், மன்னராட்சியின் இறுதியில் அவர் வேறு வழியில்லாமல் எப்படி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டு குறுநில மன்னரானார் என்று போகிறது கதை.

சரி ‘தமிழன் என்று சொல்’ எக்கேடும் கெட்டுப்போகட்டும். பிற்கால வரலாறு என்று வரும்போது விஜயகாந்தின் கடைசிப்படம் எது என்ற கேள்வி வந்தால்….அதாவது அவரது கடைசிப்படத்துக்கு முந்தைய படம் என்று சொல்லும்போது கேப்டனின் பேச்சு மாதிரியே அது பெருங்குழப்பத்தில் வந்து முடிந்து விடாதா?

Related Images: