சாலை விதிகளை மதித்து நடக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாடு முழுக்க ஆங்காங்கே சில சில டிராஃபிக் ராமசாமிகளை சந்தித்திருப்போம். அப்படிப்பட்ட டிராஃபிக் ராமசாமிகளில் ஒருவர் அதையே திரைப்படமாக எடுத்தால்…அதுதான் பச்சை விளக்கு.

சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் டாக்டர் மாறன், சாலையில் இறங்கி சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கிறார்.அடுத்து என்ன ஸ்கிரிப்ட் பிரகாரம்,அவரே தயாரிப்பாளரும் என்பதால் வேறு வழியின்றி மாறன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் தீஷா. ரசிகர்களின் நெஞ்சில் சிவப்பு விளக்கு எரியத் துவங்குகிறது இங்கே.

சில கன்னாபின்னா காட்சிகளால் இவர்களது காதல் விஸ்வரூபத்தை எட்டப்போகும் நிலையில், தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்குகிறார். இதையறிந்த மாறன், தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியை காப்பாற்றினாரா? இல்லையா? அந்த கும்பலை மாறன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். முதல் பாதியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் ஏறத்தாழ ஒரு டாகுமெண்டரி போலவே சொல்லியிருக்கிறார். சொந்தக்காசில் இப்படி ஒரு சமூக சேவையில் இறங்க ஒரு தனி தில் வேண்டும். அந்தக் கதை பெரும் சோர்வைத்தந்த நிலையில் இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் படத்திலேயே நடிப்பு, இயக்கம்,கதை,வசனம், பாடல்கள் என்று ஏகப்பட்ட சமாச்சாரங்களை தூக்கிச் சுமக்காமல் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம்.அல்லது ஒரு நல்ல இயக்குநரின் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் தீஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி சிந்திக்க வைத்திருக்கிறார். தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரி கொடுத்திருக்கும் வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.மொத்தத்தில் பொறுமையை சோதிக்கும் மஞ்சள் விளக்குதான் இப்படம்.

Related Images: