சிலருக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை உண்டு. பாலியல் பிரச்சினையில் அவர்களுக்கு வினோதமான மூச்சிறைப்பு உண்டாகும். எந்த அழகான பெண்ணும் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற கொந்தளிப்பால் அவர்களாக கூட்டி வைத்துக் கொள்கிற சொந்த நரகம்.
சிலரால் ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்கள் மான் கொம்பு சண்டை போடலாம், கவிதை எழுதலாம், காசு சம்பாதித்துக் காட்டலாம், முழு நேர விதூஷகனாக இருந்து அவதிப்படலாம். ஷோ செய்தவாறு இருந்து தங்களுக்குள் கொம்பு சுற்றிப் பொருமிக் கொண்டிருப்பார்கள்.
ஆறு பெண்களுக்காக ஆறு தரம் விஷம் குடித்து தனது காதலை உறுதி செய்து கொண்டு அப்புறம் என்ன செய்வது என்பது தெரியாமல் அவர்களை கை விட்டு தனது வேலையைப் பார்த்த ஆளை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இம்மாதிரி காம்ப்ளக்ஸ் உள்ள ஆட்கள் காவியம் செய்யும் இடத்தில் இருப்பது போக அதிகாரம் உள்ள இடங்களில் இருக்கும் போது என்ன நடக்கும்? நமது வாழ்வின் பொம்மலாட்டம் அந்த நபரின் கையில் உள்ள நூலாக இருக்கிறது, அப்போது நமது கதி என்ன?
மீ டூ விஷயத்தில் அப்ப நடந்த விஷயத்தை இப்ப எதுக்கு சொல்லணும், அப்பவே சொன்னா என்ன என்று கேட்டவர்களை எல்லாம் நமக்கு தெரியும், அந்தக் கேள்விகள் இப்போதும் இருக்கிறது என்றால் அதற்கு இப்படத்தில் பதில் இருக்கிறது.
மிகப் பிரபலமான நடிகையாகி, எந்த புகழும் நெஞ்சைத் தொடாமல் கடந்த கால அவமானங்களையே அசை போட்டுக் கொண்டு குடித்து அழிந்த பெண்களைப் பற்றியெல்லாம் இனிமேல் தான் எழுதப்பட வேண்டும்.
பாம்ப் ஷெல் படம் முழுக்க பெண்களே நிறைந்திருக்கிறார்கள்.
நிறை குறைகள் எல்லாம் மீறி சில விஷயங்களை மிக சரியான நேரத்தில் சொல்லுவது என்பது இருக்கிறது இல்லயா, அப்படி ஒரு படம்.
நிச்சயம் பார்க்கலாம்.
இயக்குனர் – ஜே ரோச்.
–முகநூலில் M.K.மணி