YouTube player

கீரைக்காரம்மா – சிறுகதை. எழுதியவர் – முத்து விஜயன்.

தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு பத்திரிக்கை குடுத்துட்டுப்போச்சு. தெனம் காலையில கூடையில கீரக்கட்டு முருங்கக்கா வாழக்கா மாத்திரம் கொண்டாரும். கீரக்கட்டு 25 ரூ முருங்கக்கா கட்டு 25 ரூ வாழக்கா 3 , 25 ரூவான்னு குடுக்கும்.

பழைய லேசா கிழிஞ்ச சேலை கட்டிருக்கும் அள்ளி முடிஞ்ச தலை. எண்ண பாக்காத முடின்னு பாக்கவே கஸ்ட்டமா இருக்கும்.
கீரக்கட்டோட பத்திரிக்க குடுக்கக்கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டுப்போச்சு.

இதுமாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு. ஆனா கலியாணத்துக்கு மூணுநாளைக்கி முன்னாடி வந்து அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன் கலியாண வேலை இருக்குன்னு சொல்லிட்டுப்போச்சு.

நான் சொன்னேன் ஏதாவது பணத்த கவர்ல போட்டுக்குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போகமுடியாது அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்குக்கலியாணம் அங்க போகனும் அவர் கண்டிப்பா வரனும்ன்னு சொல்லிருக்காருன்னு சொன்னேன். அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா நீங்க மொதநா ரிசப்சன் தான் போவீங்க மறுநாள் ஞாயத்துக்கெழமதான் பக்கத்துக்கிராமத்துல அவங்க வீட்டுலதான் கலியாணம். போய்த்தலையக்காட்டிட்டு வரலாம்ன்னு சொன்னா. அதுக்கு அவசொன்ன காரணம் அந்தம்மா கிட்டத்தட்ட பத்துவருசமா கீரை குடுக்குது .நல்ல பழக்கம்ன்னா. மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ… சரின்னு ஒத்துக்கிட்டேன்.

வழக்கம் போல ஆபீஸ்ல வேலைசெய்யிற வங்களோட ஒன்னா வேன் புடிச்சி பாஸ் வீட்டுக்கலியாணத்துக்குப்போனோம். அங்க சரியான கூட்டம். பாஸ் மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு. வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுகன்னுகும்பல் கும்பலா போய்ட்டு இருந்ததால லேட்டாகி ஒருவழியா கைகுடுத்துக்கிட்டு இருக்குறப்ப யாரோ வர எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு. நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிடபோய் அங்க எடம்புடிச்சி சாப்பிட்டு வீடுவாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.

மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக்கலியாணம். சம்சாரம் பட்டுசேலை ரெண்டு இஞ்ச் பாடர்போட்டது கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா. கார் எடுத்துக்கலாமான்னு கேட்டப்ப வேணாம் . நாம ரொம்ப பகட்டா அங்கபோகப்புடாது. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்ன்னு சொன்னா. அப்பீல்கெடையாது . நானும் பைக் எடுத்துட்டுகெளம்புனேன்.

கவருல 201 போட்டுசீல் பண்ணி எடுத்துட்டுப்போதும் அவங்களுக்கு இதுவே பெருசுன்ற எண்ணத்துல போனோம்.
அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலொ மீட்டர் இருக்கும். மெயின் ரோட்டில இருந்து தோரணம் கட்டிருந்துச்சு. வேற எதுவும் விசேசம் போலன்னு நெனச்சிக்கிட்டேன் போகப்போகத்தெரிஞ்சது அது கீரக்காரம்மா வீட்டுக்கலியாணத்துக்கானதுதான். ஊரு பூராம் வாழ்த்துப்போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு.

போகப்போக வரிசையா விலை உயர்ந்த காருக நின்னுச்சு எல்லாம் கலியாணத்துக்கு வந்தது போல.
கலியாணம் நடக்குற வீடுசொன்னா அடிச்சிப்புடுவாங்க அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப்பந்தல் எக்கசக்கக்கூட்டம். ஒரே பட்டுச்சேலை பெண்கள் . அவங்களோட கம்பேர் பண்ணிப்பாத்தா நாங்க ரொம்ப சுமார். உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி. எனக்கே கூச்சமாப்போச்சு. வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தச்செயலா வெளிய வந்துச்சு. இவங்களைப்பத்துட்டு நேர இவங்க கிட்ட வந்து வாங்கய்யா ந்னு கூப்புட்டுட்டுப்போச்சு.

எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பாடர் பட்டுச்சேலை கழுத்துபூராம் நகைகள் பெரிய ஜமீன் தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி. உள்ளார கூட்டிட்டுப்போய எல்லா பட்டுச்சேலைகளைகாரங்களையும் ஒதுக்கிவிட்டுட்டு மணமக்களை கூப்புட்டு கால்ல விழுகச்சொல்லிச்சி. அய்யா ஒங்களைபோல படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்ன்னு சொல்லிச்சி நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம். கொண்டுபோயிருந்த 200 ரூவாகவர் கூசிச்சி. எப்புடிக்குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு. வேற வழியில்லாம குத்துத்துட்டு திரும்புனவன்ன வாங்கய்யான்னு கூட்டிட்டுப்போய் தனியா டேபிள் ஒதுக்கி பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி சாப்புடவைச்சி கெளம்பும் போது தாம்பூலப்பைன்னு ஒண்ணு குடுத்துச்சு. ரொம்ப சந்தோசமுய்யா நீங்க வந்துதுலன்னு மனம் சந்தோசத்தோட வழி அனுப்புச்சு. வீட்டுலவந்து தாம்பூலப்பையப்பிரிச்சா அதுக்குள்ள வெள்ளில சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு.

எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல. அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப்பத்திரிக்கைய பிரிச்சிபடிச்சா. அதிர்ந்து போனேன். அந்த ஊருல பெரிய வெவசாயக்குடும்பம் அது. மகன் பேருக்குநேர M.Sc (Agriculture) ன்னும் பொண்ணு பேருக்குநேரயும் M.Sc (Agriculture)ன்னும் போட்டிருந்துச்சு. சொந்தக்காரங்க எல்லாம் பெரிய படிப்பு பதவில இருக்குறதும் தெரிஞ்சது,
அடுத்தவாரம் ஞாயத்துக்கெழம அதேகீரக்காரம்மா பழையபடி கீரைக்கூடையோட வியாபாரத்துக்கு வந்துடுச்சு.

என்னால ஆவல அடக்கமுடியல இத விசாரிக்கனும்ன்னு தோணிச்சு . அவங்களை வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒக்காரவைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி
உங்களுக்கு சந்தேகம் வந்தது ஞாயம்தான் நாங்க அந்த ஊருல வெவசாயக்குடும்பம். அஞ்சு ஏக்கரு கீரை பயிரிட்டு இருக்குறோம் மகன் தான் படிச்சிட்டு வெவசாய்த்துக்கு ஒதவிபண்ணுறான். அந்த விவசாயக்கல்லூரிலதான் வேலைபாக்குறான். பொண்ணும் அதேகல்லூரிதான். அவளுக்கும் வெவசாயத்துல ஆர்வம் அதுனாலதான் காதல் கலியாணம்.

முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுரோம் காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம் . நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிதுன்னு சொல்லிச்சி.

தோற்றத்தப்பத்தி கேட்டேன் ஏன் அங்க ராணிமாதிரி இருந்த நீங்க இங்க கீரவிக்கிறப்ப இப்புடின்னு கேட்டேன். அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி கீரவிக்கிறப்ப பட்டுச்சேலையும் நகைநட்டோடயும் வந்தா நல்லாருக்குமா ஆராவது வாங்குவாகளான்னு.

சும்மா 40ஆயிரம் மாசச்சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டுறோம் ந்னு நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு
அந்த விவசாயத்தாயக் கையெடுத்துக் கும்புடத்தோணிச்சி. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் குறள் நெனவுக்கு வந்துச்சு.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.