பெரும் பணக்காரர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு கம்பெனிகளுக்கு வங்கிக் கடன் எவ்வாறு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது பற்றி இங்கே தெளிவாக பார்க்க உள்ளோம்

இங்கே பெருமுதலாளிகளின் தொழில் கடன், வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது ஆளுகின்ற ஆட்சியாளர்களின் சொந்தப் பணமல்ல அவர்கள் சார்ந்த கட்சியின் சொந்த பலமும் அல்ல.

மாறாக, நம்முடையது. நாம் ஒரு சிறு குண்டூசி வாங்கும்போதும் வரி கட்டித்தான் வாங்குகின்றோம். வேறு எந்த ஒரு பொருள் வாங்குவது என்றாலும் நாம் அதற்குரிய வரி கட்டித்தான் வாங்குகின்றோம்.

இவ்வளவு ஏன்? நம் வீட்டு குழந்தைகள் சாப்பிடுகின்ற ஒவ்வொரு திண்பண்டம் மற்றும் உணவுப்பொருள் அனைத்திற்குமே வரி உண்டு.

அந்த வரிப்பணம் அத்தனையும் மொத்தமாக பெருமுதலாளிகளுக்கு ஒவ்வொரு வங்கியும் கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கின்றது.

ஏதோ வங்கியில் பணியாற்றுபவர்களின் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போன்று கொடுக்கின்றார்கள்.

ஆனால் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு வாங்கிய கல்விக் கடன் தள்ளுபடி செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதேபோன்று விவசாய கடன் தள்ளுபடி செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். காரணம் என்னவென்று கேட்டால், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சொல்கிறார் இப்படி தள்ளுபடி செய்வது என்பது நேரடியான நேர்மையான பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது.

ஆனால் பெரிய பெரிய முதலாளிகளுக்கு தாராளமாக தள்ளுபடி செய்யலாம். நமது வங்கிகள் அனைத்தும் கடன்களை தள்ளுபடி செய்யலாம். ஏனென்றால் கல்விக் கடன் வாங்கி படிப்பவர்கள், விவசாயிகள் என்றைக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சொந்தமாக தொழில் செய்து முன்னேற்றுவார்கள்? அது இயலாத காரியம் அதற்கு பதிலாக பெருமுதலாளிகள் என்றால், அவர்கள் மூலம் கோடி கோடியாக நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்கிறார்களாம்

இது போன்ற மிகப்பெரிய மோசடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

தயவு செய்து முழுவதுமாக படித்து விட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை அரசியல்வாதிகளை ஆதரிப்பவர்கள் ஆக இருந்தால் எடுத்ததுமே தயவுசெய்து இதனை தள்ளுபடி செய்து விடாதீர்கள். அதாவது இந்த பதிவை தள்ளுபடி செய்து விடாதீர்கள் என்று சொல்கின்றேன்.

ஏனென்றால் இதில் உங்கள் பணமும் உள்ளது. அப்படி சொல்வதை விட நமது பணம்தான் இது. நமது வரிப்பணம் தான் இவ்வளவு பணமும்.

நம் வரிப் பணத்தைதான், வாரிக் கொடுக்கின்றார்கள்.

68000 கோடி தள்ளுபடி விஷயத்தில் ராம்தேவ் பெயர் அடிபட்டது அல்லவா? அதில் ஒரு பிழை நேர்ந்து விட்டது.

உண்மையில் ராம்தேவ் கம்பெனிக்கு தள்ளுபடி தரவில்லை.
அப்படிச் சொன்னது தவறு.

அப்படியானால், ருச்சி சோயா ராம் தேவ் கம்பெனி இல்லையா? என்று கேட்டால், அது ராம்தேவ் கம்பெனிதான். ஆனால், அவர் வாங்குவதற்கு முன்பே தள்ளுபடி தரப்பட்டு விட்டது.

அடாடா… நாம எவ்ளோ பெரிய தப்பு செஞ்சுட்டோம். அநியாயத்துக்கு ராம்தேவ் பேரை இழுத்துட்டோம் அப்படீன்னு எனக்கு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு.

அதனால், விஷயத்தை கொஞ்சம் ஆராயலாம் என்று போனேன்.

போனேனா… அப்புறம்தான் தெரிந்தது, விவகாரம் அவ்வளவு சாதாரணம் அல்ல என்று.

ரொம்பவே சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போம்.

ருச்சி சோயா கம்பெனி 2012இல் உலகின் டாப் 250 கம்பெனிகளில் ஒன்று. இறக்குமதி விதிகள் மாற்றம், சர்வதேச சந்தையில் விலையேற்றம், ஏற்றுமதித் தீர்வை அதிகரிப்பு, போன்ற பல பிரச்சினைகளால், 2017இல் கம்பெனிக்கு சுமார் 10000 கோடி ரூபாய் கடன்!
கம்பெனி திவால் ஆகிறது.

கம்பெனிக்கு கடன் கொடுத்தவர்கள் யார் என்று சொல்லாமலே உங்களுக்கு தெரியும். கம்பெனியின் நிதிநிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து செபி கவனிக்கிறது. ரிசர்வ் பேங்க் கண்காணிக்கிறது.

கம்பெனிக்குக் கடன் கொடுத்தவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க, விற்பதற்காக RP (resolution professional) நியமிக்கப்படுகிறார்.

2018 முதல் பேரம் நடக்கிறது. நடக்கிறது. நடக்கிறது. …

கடைசியில 2019 டிசம்பரில் ராம்தேவ் வாங்குகிறார்.
2019 செப்டம்பரிலேயே தள்ளுபடி கொடுக்கப்பட்டு விட்டது.

ஆக… டெக்னிகலி பார்த்தால், ராம் தேவுக்கு தள்ளுபடி தரப்படவில்லை. ருச்சி சோயாவுக்குத்தான் தரப்பட்டது.

ஆனால், ராம் தேவ் 2019 டிசம்பரில் வாங்குகிறார்.
அதற்கு வசதியாக 2019 செப்டம்பர் வாக்கில் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது!

இன்னொரு விஷயம் பார்ப்போம்.
2018 முதலாகவே கம்பெனியை விற்பதற்கான முயற்சி நடந்து வந்தது. சரியா?
2018இல் வந்த செய்திகளின்படி, அதானி கம்பெனி 6000 கோடி தருகிறேன் என்றது.
ராம் தேவ் சுமார் 5700 கோடிக்குக் கேட்டார்.
எது அதிகம்? 6000 கோடிதானே?

ஆனால் பாருங்கள்…. குறைவாகச் சொன்ன ராம்தேவுக்குத்தான் ருச்சி சோயா கிடைத்திருக்கிறது!

அதிலும் பாருங்கள். 2018இல் செய்திகளின்படி ராம் தேவ் சொன்னது 5700 கோடி. ஆனால் 2019 டிசம்பரில் வாங்கும்போது 4350 கோடியாக இறங்கிவிட்டது! (4111 கோடி கடன் கொடுத்த வங்கிகளுக்கு, மீதி இதர வகையில்.)

ஆக, 9300 கோடி ரூபாய் கடனுக்கு திரும்பக் கிடைத்தது 4111 கோடிதான்.

அதிலும், ராம் தேவ் கம்பெனி தன் சொந்தப் பணத்திலிருந்து வாங்கவில்லை. ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், அலகாபாத் பேங்க் – ஆகிய மூன்று வங்கிகளிலிருந்து கடன் வாங்கித்தான் ராம்தேவ் கம்பெனி இந்த ருச்சியை வாங்கியிருக்கிறது.

ஆக, 2019 டிசம்பரில் ராம்தேவ் வாங்குவதற்குகு வசதியாக 2019 செப்டம்பருக்கு முன்பாகவே 2000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து விட்டார்கள்!

இந்த விற்பனையின் மூலம் ருச்சி சோயாவுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைத்ததே என்பார்கள்.

ருச்சி சோயாவுக்கு 1800 ரூபாய் கடன் கொடுத்திருந்த ஸ்டேட் பேங்குக்கு 883 கோடிதான் கிடைத்தது. 815 கோடி கடன் கொடுத்திருந்த சென்ட்ரல் பேங்குக்கு 397 கோடிதான் கிடைத்தது.
(அதானி சொன்ன 6000 கோடிக்கு விற்றிருந்தால் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கும் அல்லவா!?)

முந்தைய பத்தியில் பார்த்தபடி, ஏற்கெனவே ருச்சிக்கு கடன் கொடுத்த அதே ஸ்டேட் பேங்க்கும் இன்னும் சில பேங்குகளும் அதே ருச்சி கம்பெனிக்காக – ஆனா ராம் தேவ்க்காக மறுபடி கடன் கொடுத்திருக்கின்றன!

ஆக, 2018இல் 6000 கோடி கொடுக்க முன்வந்த அதானியை விட்டு ராம்தேவுக்குப் போனதே ஒரு மர்மம்!
2018இல் 5700 கோடி என்று சொன்ன ராம்தேவ் கம்பெனி இப்போது 4350 கோடிக்கு வாங்கியது இன்னொரு மர்மம்.
2019 டிசம்பரில் ராம்தேவ் வாங்குவதற்கு வசதியாக மூன்று மாதங்கள் முன்பே 2200 கோடி தள்ளுபடி செய்தது ஒரு மர்மம்.

எல்லாவற்றுக்கும் மேலாக…
ருச்சியின் பங்கு விலை 27 ஜனவரியில் 17 ரூபாய்
இன்றைய தேதியில் அதே பங்கு விலை 413 ரூபாய்!

இப்படியொரு பங்கு விலையேற்றம் நீங்கள் சாதாரணமாக பார்க்கவே முடியாது!

பல வங்கிகளிடம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆன ஒரு கம்பெனியை வாங்குவதற்கு, அதேபோல இன்னும் பல வங்கிகளிடமிருந்து கடன் பெற்று விலைக்கு வாங்கிய ராம்தேவ் இன்னும் சில நாட்களில் தன் பங்குகளை அதிக விலைக்கு விற்றுவிடலாம்.

சில மாதங்களில் கைமாற்றிவிட்டு சில ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொண்டு போகலாம்.

அல்லது, இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து, ராம் தேவும் நஷ்டம் காட்டிவிட்டுப் போகலாம்.

அப்போதும் மறுபடி தள்ளுபடி செய்யப்படும். அப்போதும் இன்னொரு காம்தேவ் இன்னும் சில வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி அதை வாங்குவார்.

இப்படியே மாற்றி மாற்றி அவர்கள் தள்ளுபடி கொடுக்க, கோடி கோடியாக எடுத்துக் கொண்டு போக, நாம செத்துச் செத்து விளையாடலாம்.

நன்றி. : தியாகேஷ் குரு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.