மேற்கத்திய சினிமாவில் பலமுறை முயற்சித்துப் பார்க்கப்பட்ட split screen சினிமா என்ற முயற்சியை தமிழில் செய்திருக்கும் படம். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஓடுகின்றன.

வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின் கதாபாத்திர வடிவமைப்பு இதற்கு நியாயம் செய்கிறது.

வினோத்கிஷன் ஒரு மனவளர்ச்சி குன்றியவர். அவரை வீட்டினுள் அடைத்து வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார் அம்மா ரோகிணி. நான்கு நண்பர்களால் நயவஞ்சகமாக கடத்தி அடைத்துவைக்கப்பட்ட ஒரு இளம்பெண் அவசர நேரத்தல் கிடைத்த போனில் ஏதோ ஒரு நம்பருக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கிறார். அவர் பேசியது வினோத்கிஷனிடம்.

படம் தொடங்கி கொஞ்ச நேரத்துக்கு வினோத்கிஷனின் மூளைவளர்ச்சியற்ற கதாபாத்திரமும் அவர் பேசும் பேச்சுகளும் தொந்தரவாக இருக்கின்றன. போகப்போக அந்தக்கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது. மனிதத்தின் உச்சம் என்று சொல்லுமளவுக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக்கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார் வினோத்கிஷன்.

நாயகியாக நடித்திருக்கும் கெளரிகிஷனுக்குப் பரிதாபமான வேடம். யாருக்கும் நடக்கக்கூடாத கொடூரம் நடந்துமுடிந்த பின்பு நம்பியிருந்த காதலன் மனம்மாறிவிட்டான் என்பதை உணர்ந்து பார்க்கும் பார்வையில் கலங்க வைத்துவிடுகிறார் கெளரிகிஷன்.

சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் சச்சின், அவரை நம்பி ஏமாறும் மகேந்திரன், சுருளி,லகுபரன் மற்றும் ஒரு சில காட்சிகளில் வருகிற ரோகிணி, பாலா ஆகிய அனைவரும் மிகப்பொருத்தம்.

மிகக்குறுகிய வாய்ப்பு என்றாலும் காட்சிகளைக் கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரக்குமார். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது.

சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு படத்தை இயல்பாகக் கொண்டு செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஜெகன்விஜயா, தனது நல்ல தொடக்கத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds