நாயகன் த்ரிகுன் நாயகி ஸ்ரீஜிதாகோஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.குடும்பம் இல்லாத தனக்கு காதல் மனைவி மூலம் கிடைக்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ந்திருக்கும் நாயகன், மனைவியின் சகோதரியையும் அம்மாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.அது ஏன்? என்பதற்கான விடையும் அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதையும் வயது வந்தோருக்கான கதையாகச் சொல்லியிருப்பதும்தான் இந்தப்படம்.

நாயகன் த்ரிகுன்,இளைஞர்கள் பார்வையில் பெரும் அதிர்ஷ்டசாலி என்றும் மற்றோர் அடப்பாவி என்றும் சொல்கிற மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீஜிதா கோஷ் கதாபாத்திரம் மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் ஆண்வர்க்கம் மிகவும் விரும்பும் வகையிலும் அமைந்திருக்கிறது.காதலனிடம் நடந்துகொள்ளும் விதமும் அதே காதலன் கணவனான பின்பு அவர் நடந்து கொள்ளும் விதமும் ஆண்களைக் கவருகிற வண்ணம் அமைந்திருக்கிறது.அவரும் தாரளாமாக நடித்திருக்கிறார்.

நாயகியின் சகோதரியாக நடித்திருக்கும் இனியாவும், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதாவும், கவர்ச்சி காட்டுவதற்காகவே படைக்கப்பட்டது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

தம்பி ராமையா,சத்யன்,ஆலி,ரவி மரியா,ஜாவா சுந்தரேசன்,மதன்பாபு,விஜய் டிவி தனசேகர்,வினோத் உட்பட படத்தில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள்.இருந்தாலும் நகைச்சுவை குறைவாகவே இருக்கிறது.

சி.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.படம் வண்ணமயமாக இருக்கிறது. ஒன்றுக்கு மூன்று நாயகிகளைச் சுற்றிச் சுற்றி வந்து மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கலாம்,பின்னணி இசையிலும் காமம் வழிந்தோடுகிறது.

கே.குமாரின் படத்தொகுப்பில் படம் இலகுவாகச் செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.ராஜசேகர்.திருவள்ளுவரின் இன்பத்துப்பாலைப் போல் படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து ஒன்றுக்கு மூன்றுபேரை வைத்து திகட்டத் திகட்டப் பேசியிருக்கிறார்.காட்டியிருக்கிறார்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பெண் கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளும் விதம், உறவுமுறைகள் ஆகியன அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருப்பதும் தெரியாமல் தவறு நடந்தாலே பதறிப்போகும் சமுதாயத்தில் தெரிந்தும் அதைத் தொடர நினைக்கிறார்கள் என்பதும் கூடுதல் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.

தொடங்கும்போதே இது வயது வந்தோருக்கான படம் என்று முடிவுசெய்து, மிகத் தாரளமாகப் படம் எடுத்து இளைஞர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜி.ராஜசேகர்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.