கார்மேனி செல்வம் திரைப்படம். பத்திரிக்கையாளர் சந்திப்பு. சமுத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன்,லட்சுமி பிரியா சந்திரமௌலி,அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி,மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கார்மேனி செல்வம்.ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌

இப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில்,மார்ச் 25 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.‌

நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர்,பாடலாசிரியர் மணி அமுதவன்,கரண் சக்கரவர்த்தி,தினேஷ்,படத்தொகுப்பாளர் ஜெகன்,படவா கோபி,நடிகர் சங்கரநாராயணன்,நடிகை அபிநயா,தயாரிப்பாளர் அருண்,நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி,இயக்குநர் ராம் சக்ரி,சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ்,ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி,ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில்….

இது என்னுடைய இரண்டாவது திரைப்படம்.இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்’குறையொன்றுமில்லை’என்ற படத்தைத் தயாரித்தேன்.இந்தப்படம் ஒரு ஃபேமிலி டிராமா.அனைத்துத்தரப்பு இரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும்.இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் இராமானுஜம் பேசுகையில்….

இந்தப்படத்திற்காகக் குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.பாடல்கள்,இசை,பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது.பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது.பாடல்களை கொச்சி,ஜெய்ப்பூர்,மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிரபலமான இசைக் கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம்.படமும் நன்றாக இருக்கிறது.படம் வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்

கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில்….

இங்கு வருகை தந்திருக்கும் சிறப்புவிருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி.நிகழ்விற்கு வருகைதந்த படக்குழுவினருக்கும் நன்றி.தயாரிப்பாளரும்,இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌அதனால் இந்தப்படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌அவர்களுக்கும் நன்றி.கார்மேனி செல்வம் ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார்.

நடிகர் கோதண்டம் பேசுகையில்….

இந்தப்படத்தை ‘ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத்தான் தெரியும்’ என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌பிரசவவலி என்பது ஒரு தாயால் மட்டும்தான் உணரமுடியும்.உலகத்தில் அதைப்போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணரமுடியாது என்று சொல்வார்கள்.அந்த வலி – யாராலும் தாங்கமுடியாத வலி.மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.
ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான்.அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித்தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே,அதை எதனோடும் ஒப்பிடமுடியாது.இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக்கூட ஒரு கணவனால் வாங்கித்தர முடியவில்லையே என்ற வலியை சொல்வதுதான் இந்தப்படம்.பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் தகப்பனாகவும்,கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார்.’கார் மேனி செல்வம்’ படத்தில் யாரும் நடிக்கவில்லை.அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்,இதனால் இந்தப்படம் பார்க்கும்போது இரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தைக் கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும்,திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும்.அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும்.திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது.சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைக் கடந்து பலருக்கு வாழ்க்கை,இலட்சியம் என்றார்.

நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில்….

இந்தப்படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி.உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்கவைத்தார். இந்தப்படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்றார்.

நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில்….

அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி.இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது நான் நிறைய நல்லமனிதர்களைச் சந்தித்தேன்.மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாகப் பணியாற்றினேன்.‌
இப்படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் அன்பும்,எளிமையும் அதிகமாக இருந்தது.அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.இந்தப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து இரசிக்க வேண்டிய படம் இது.‌அன்பு நிறைந்த படம்.இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில்…..

எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.நேற்று இந்தப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப்படத்தின் கருவில் இருந்து சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌
இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மனநெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது.இந்தப்படம் அதே மன நெருக்கடியைப் பதிவு செய்கிறது.அது ஆயுதப்போரினால் விளைவது அல்ல,சமூக உளவியல் போரினால் எழுவது.
இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது.தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அதுபோன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்குச் செல்கிறார்கள்.அப்படிச் செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்தப்படம்,மிகவும் அழகாக,உணர்ச்சி அளவில் நேர்மையாகக் கேள்வி எழுப்புகிறது.
தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள்தான்.நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌சிலநாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம்.தமிழர்களுக்கு பலநாடுகளுக்குச் சென்று பரவி வாழ்வது புதிதல்ல.குற்றமும் அல்ல.கேள்வி என்னவென்றால்,நீங்கள் எங்கு இருந்தாலும்,உடல்நலமும்,மனநலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான்.ஆம் என்றால் அது உன் ஊர்.இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்தக்கேள்வி உரியது.இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது,மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம்.வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான்.அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌நான் எங்கு இருந்தாலும் உடல்நலத்துடனும்
மனநலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.
இந்தக்கருத்தின் சில சாயல்களை இந்தப்படத்தில் நான் பார்த்தேன்.‌உண்மையில் ராம்சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளைக் கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை.இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னைச் சந்தித்தார்.இதுவே இறைவனுடைய அரவணைப்புதான் என இந்தமேடையில் பதிவு செய்கிறேன் என்றார்.‌

இயக்குநர் ராம்சக்ரி பேசுகையில்…..

இந்தவிழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுதான் இந்தப்படத்திற்குக் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.அவருடைய எழுத்துகள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌
இந்தப்படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.நான் இதற்குமுன் ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன்.அதன்பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம்சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌
என்னுடைய முதல்படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதிதிரட்டி உருவாக்கினேன்.‌அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌
இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது.அவர் திரைக்கதையை முழுவதுமாகப் படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா,இல்லை செல்வத்துடன் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்றுதானே சொல்லவருகிறாய் என்று சொல்லும்போது நான் சொல்ல நினைத்த விசயத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார்.அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்னபோது,உடனே ஓகே சொன்னார். என்னைப்பற்றி ஒருவார்த்தை கூடக் கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போதுவரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌
புதுமுகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க்.அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது.படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடுவரை பணம் இருக்கவேண்டும்.ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது,செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது,காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால்தான் வணிகரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆகமுடியும்.‌
இந்த மூன்று விசயங்களையும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.இதுதான் என்னுடைய முதல்படத்திலிருந்து எனக்குக் கிடைத்த புரிதல்.‌ முதல்காட்சியிலிருந்து உச்சகட்டக் காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால்தான் வெற்றி பெறமுடியும் என்பதைத் தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
நடிகை அபிநயா படப்பிடிப்புத்தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.
இந்தப்படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழுஒத்துழைப்பையும் வழங்கினார்.‌
இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார்,வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார்.ஒரு படைப்பு என்பது கூட்டுமுயற்சிதான்.தனிஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்லமுடியாது.நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌இசையைப் பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் -பாடலாசிரியர் – பாடகர்கள் – ஆகியோர்கள் மட்டுமே.ஆனால் இதற்குப்பின்னால் பல இசைக்கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.
இந்தப்படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம்.இது ஒரு முதல்முயற்சி.‌இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக இராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை.அவருடைய இசைநிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.
இந்தப்படத்தில் சிங்கிள்ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார்.இதனை சாத்தியப்படுத்திய நடனஇயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன்நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.‌

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்….

இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்லவேண்டும்.என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌கதையைப் படிக்கும்போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும்.அந்த மனசுதான் இயக்குநர் ராம்சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது.அவரைச் சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியைத் தொடங்கினோம்.அவர் இப்போது என் வாழ்க்கையில் மிகமுக்கியமான நண்பராக இருக்கிறார்.இவரைப்போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது.இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும்,எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.இப்படி இருப்பவர்களால்தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.சக்ரி சார் நன்றி.
இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள்,நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.கே பி சார் பட்டறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.எல்லோரும் வருவார்கள்.எழுதுவார்கள்.ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய இரசிகன்.’மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்’ என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது.கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச்சொல் எனச் சொல்வார்,அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.
மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள்தான் மிகவும் சந்தோசமானவர்கள்.இதை சொல்லவருவதுதான் இந்த ‘கார்மேனி செல்வம்’ படைப்பு.
இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.அதைப்பார்த்த இயக்குநர்’தேவலோகத்தில் இருக்கிறோமோ..!’என்று தன் உணர்வைப் பகிர்ந்துகொண்டார்.நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.
பணக்காரன் வேறு.செல்வந்தர் வேறு.பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன்.செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்.உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவதுதான் இந்தப்படம்.இந்தபடைப்பில் இதுபோன்ற நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறோம்.
‘கார்மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல.நாங்கள் இல்லாமல் போகலாம்,ஆனால் இந்த படைப்பு இருக்கும்.உங்களுடன் எப்போதும் இருக்கும்.நிறைய சுமைகளைத் தூக்காதீர்கள்.இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளைச் சுமக்காதீர்கள்.அதன்பிறகு நடக்கக்கூட முடியாது.அந்தச்சுமையைச் சிறிதுசிறிதாக இறக்கி வைத்துவிட்டு,கைவீசி சந்தோசமாக நடந்துபாருங்கள்.மகிழ்ச்சியை உணர்வீர்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.