இந்திய எல்லையில் காணாமல் போகும் அணுஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருளை கண்டுபிடித்து பூதம்போல பாதுகாத்துவருகிறார் இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ். அதை அவரிடமிருந்து பிடு்ங்கி பாகிஸ்தான் கொண்டுபோக ஒரு குழு திட்டமிடுகிறது.அம்முயற்சியை முறியடிக்க இந்தியாவின் உயரிய அமைப்பான ரா களமிறங்குகிறது.ஒருகட்டத்தில் அவர்களே குற்றவாளிகளாகும் எதிர்பாரா நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் கட்டுமஸ்தான உடலுடன் பிரமிப்பாக அறிமுகமாகிறார்.காதலில் உருவது அவருக்குக் கைவந்த கலை இன்னும் கூடுதலாக சண்டைகளில் மிரட்டியிருக்கிறார்.

ரா அமைப்பின் தலைவராக வரும் மஞ்சுவாரியர் அவ்வளவு உயர்ந்த பொறுப்புக்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். உடலை வருத்தி சண்டை போட்டிருக்கிறார்.குற்றம்சாட்டப்பட்டு கைதாகும் நேரத்தில் அசத்தியிருக்கிறார்.

ஆர்யாவின் காதலியாக நடித்திருக்கும் அனகா புதுநல்வரவு.

ரைசாவில்சன் பாத்திரப்படைப்பு உளவாளி வர்க்கத்தின் நிலையைப் பிரதிபலித்து அதிரவைக்கிறது.

அதுல்யாரவியும் ஆச்சரியப்படுத்துகிறார்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மாறாத கம்பீரத்துடன் வந்து வரவேற்புப் பெறுகிறார் சரத்குமார்.

கவுதம் கார்த்திக்குக்கு குருவிதலையில் பனங்காய் வேடம்.அதற்கேற்ப நடிக்க முயன்றிருக்கிறார்.

காளிவெங்கட்,ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நன்றி.

ஒளிப்பதிவாளர் அருள்வின்சென்டின் உழைப்பால் ஆங்கிலப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.ஒவ்வொரு காட்சியிலும் செலவு நிரம்பி வழிந்திருக்கிறது.

திபுநினன்தாமஸ் இசையில் ஒரு காதல் பாடல் இருக்கிறது நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்தின் தர்த்தை உயர்த்தியிருக்கிறது.

சண்டை இயக்குநர் ஸ்டண்ட் சில்வாவும் படத்தொகப்பாளர் பிரசன்னாவும் படத்தை மிகவும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.

இந்திய உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை முன்னணியில் வைத்து அவற்றின் ஆழ நீள அகலங்களை நமக்கு அறியத் தந்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

மிகவும் ஸ்டைலிசான காட்சியமைப்புகள் கதாபாத்திர வடிவமைப்புகளைச் செய்திருக்கும் இயக்குநர்,பிரதமர் மோடி கதாபாத்திரத்துக்குப் பலவீனமான நபரைத் தேர்ந்தெடுத்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

உளவுஅமைப்புகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி உலக நாடுகளுக்கிடையேயான அணுஆயுதப் போட்டிகள், அணுஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடிய பெருந்தீமைகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்திக் கலங்க வைத்திருக்கிறார்.

வெகுமக்களுக்குத் தொடர்பில்லாத கதைக்களம் என்றாலும் அனைவரும் இரசித்துப் பார்க்கக்கூடிய வகையில் ஓர் ஆக்சன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.சண்டைப்படப் பிரியர்களுக்கு விருந்து.

– கதிரோன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.