அரசியல் மேடைகளில் முழங்கப்படும் “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமை” என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய பொருளாதாரச் சுரண்டல் ஒளிந்திருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?
ஈராக் முதல் லிபியா வரை, மேற்கத்திய நாடுகள் காலடி எடுத்து வைத்த இடங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கமும் பணமும் மாயமாய் மறைந்துவிட்டன.
அவை எந்தவொரு சினிமா பாணி கொள்ளையராலும் திருடப்படவில்லை; பாலைவனத்தில் புதைக்கப்படவும் இல்லை.
மாறாக, “ஜனநாயகம்” என்ற உன்னதப் பெயரில் அவை அள்ளிக்கொண்டு போகப்பட்டன.
ஈராக் (2003), லிபியா (2011), காங்கோ, மாலி, கானா என மேற்கத்திய நாடுகள் எங்கெல்லாம் தங்களின் குண்டுகளுடனும், சமாதானப் பேச்சுகளுடனும் நுழைந்தனவோ, அங்கெல்லாம் வெற்றுப் பெட்டகங்களும், சிதைக்கப்பட்ட அருங்காட்சியகங்களுமே மிஞ்சின.
ஊடகங்கள் காட்ட மறுக்கும், வரலாற்றின் பக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைக் கதையை இப்போது பார்ப்போம்.
ஏப்ரல் 2003-ல், அமெரிக்க இராணுவ இயந்திரம் பாக்தாத்திற்குள் நுழைந்தன. சதாம் உசேனின் ஆட்சி வீழ்ந்தது. ஆனால், அங்கு முதலில் கொள்ளையடிக்கப்பட்டது ஆயுதக் கிடங்கோ அல்லது ராணுவ முகாமோ அல்ல; மாறாக, மனித நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்பட்ட ஈராக் தேசிய அருங்காட்சியகம் (The National Museum of Iraq) ஆகும்.
ஏப்ரல் 10, 2003 அன்று அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இனம்காணப்படாத கொள்ளையர்கள் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அங்கிருந்த ஒட்டுமொத்த வரலாற்றுப் பொக்கிஷங்களையும் சூறையாடினர்.
சுமேரியர்களின் சிலைகள், பாபிலோனிய முத்திரைகள் மற்றும் உலகின் முதல் எழுத்து வடிவங்கள் பொறிக்கப்பட்ட பலகைகள் என சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான 15,000 தொல்பொருட்கள் காணாமல் போயின.
‘The Newyouk Times’ இதனை மத்திய கிழக்கின் மிக மோசமான கலாச்சாரப் பேரழிவு என்று குறிப்பிட்டது.
அப்போது அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்போதைய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் கூறுகையில், “இதை தடுத்து நிறுத்துவது கடினமானது” என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.
2004-ஆம் ஆண்டு, ஈராக் மக்களின் சொந்த எண்ணெய் வருவாய், ஐநா சபை நிதி மற்றும் முடக்கப்ப்பட்ட அரசு சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர்களாக, பெரும் மூட்டைகளில் ரொக்கமாக (Cash) ஈராக்கிற்குள் கொண்டு வந்தது. நோக்கம்: “ஈராக்கின் மறுசீரமைப்பு”.
ஆனால், அதன் பின் நடந்த தணிக்கைகள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின:
ஈராக் மக்களின் எண்ணெய் பணத்தில் மட்டும் முதற்கட்டமாக 8.7 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவால் எந்தவொரு கணக்கும் காட்ட முடியவில்லை. அந்தப் பணம் எங்கே போனது, யாருக்குக் கொடுக்கப்பட்டது என்ற எந்தப் பதிவும் இல்லை.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட மூன்று விரிவான தணிக்கைகளின் முடிவில், ஒட்டுமொத்தமாய் 18 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய்) காற்றில் கரைந்தது போல் மாயமாகி இருந்தது.
இந்த மாபெரும் நிதி மோசடியைக் கண்டு கொதித்தெழுந்த ஈராக் நாடாளுமன்றம், ஐநா சபைக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது. அதில்,
“அமெரிக்காவின் அரசு நிறுவனங்கள், ஈராக் நாட்டு மக்களின் செல்வத்தை திட்டமிட்டுத் திருடி, மிகப்பெரிய நிதிக் குற்றத்தைச் செய்துள்ளன என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன”
என்று மிக நேரடியாக்க் குற்றம் சாட்டியது.
ஆக்கிரமிப்பாளர்கள் தங்களை “விடுதலை வீரர்கள்” என்று உலகிற்குக் காட்டிக் கொண்ட போது, பின்னணியில் அரங்கேறியது மனித வரலாற்றின் மிக மோசமான, அதிகாரப்பூர்வ பகற்கொள்ளை!
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு லிபியா.
அதன் தலைவர் முஅம்மர் கடாபி, மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்தார்.
கடாபியின் திட்டம் (2009): ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் ‘தங்க தினார்’ (Gold Dinar) என்ற புதிய தங்க அடிப்படையிலான நாணய முறையைக் கொண்டு வர திட்டமிட்டார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க எண்ணெய் வர்த்தகம் டாலருக்குப் பதிலாகத் தங்கத்தின் அடிப்படையில் நடக்கும்.
இது நடந்திருந்தால், அமெரிக்காவின் ‘பெட்ரோ டாலர்’ (Petrodollar) நாணயம் உலக சந்தையில் தன் மதிப்பை இழந்திருக்கும்.
உலக ஊடகங்கள் திட்டமிட்டே மறைத்த ஒரு கசப்பான உண்மை, பின்னாட்களில் ஹிலாரி கிளிண்டனின் கசிந்த தனிப்பட்ட மின்னஞ்சல்கள் (Wikileaks Emails) மூலம் அம்பலமானது.
ஏப்ரல் 2011-ல் அனுப்பப்பட்ட ஒரு ரகசிய மின்னஞ்சல், லிபியாவின் அதிபர் முஅம்மர் கடாபியிடம் 143 டன் தங்கமும், அதற்கு இணையான வெள்ளியும் இருப்பதை உறுதி செய்தது.
ஆப்பிரிக்காவின் இந்த அசுர வளர்ச்சி, பிரான்ஸ் நாட்டின் தூக்கத்தைக் கெடுத்தது. காரணம், அதுவரை ஆப்பிரிக்காவின் 14 நாடுகளின் நாணய முறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பிரான்ஸ் மட்டும்தான்.
கடாபியின் ‘தங்க தினார்’ திட்டம் நடைமுறைக்கு வந்தால், தங்களின் பொருளாதார ஆதிக்கமும், சொகுசு வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்த பிரான்ஸ், நேட்டோ (NATO) படைகளை முன்னிறுத்தி லிபியா மீது இரக்கமின்றி குண்டுமழை பொழிந்தது.
அக்டோபர் 2011-ல் கடாபி கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதன் பிறகு லிபியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் இதுபற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் கேமராக்களின் முன்னால் எள்ளலோடு சிரித்துக்கொண்டே வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த வாசகத்தைக் கூறினார்:
நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்துபோனார்!” (We came, we saw, he died!)
அந்தச் சிரிப்பிற்குப் பின்னால் மறைந்திருந்த நிஜமான வேட்டை என்ன தெரியுமா?
கடாபி வீழ்த்தப்படுவதற்குச் சற்று முன்பாக, லிபியாவின் அந்த 143 டன் தங்கமும் மாயமாய் மறைந்தது.
அது இன்றுவரை எங்குள்ளது, யார் வசம் இருக்கிறது என்பது உலக மர்மங்களில் ஒன்று. அதுமட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளின் வங்கிகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த லிபிய நாட்டு மக்களின் 150 பில்லியன் டாலர் ரொக்க இருப்பும் தடையமே இல்லாமல் காணாமல் போனது.
எந்தவொரு சர்வதேச விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி ஒரு முழு நாட்டின் செல்வமும் உலக வரைபடத்திலிருந்து அப்படியே துடைத்தெறியப்பட்டது.
உலக வரைபடத்தை நாம் உற்று நோக்கினால், புவிசார் அரசியலின் மிகக் கொடூரமான ஒரு கசப்பான உண்மை வெளிப்படும்.
உலக இயற்கை வளங்களின் அதிகாரப்பூர்வ மையம் ஆப்பிரிக்கா தான். ஆனால், அதன் இன்றைய நிலை என்ன?
பூமியின் மொத்தத் தங்க இருப்பில் 40%, பிளாட்டினத்தில் 80%, மற்றும் உலக எண்ணெய் வளத்தில் 15% ஆப்பிரிக்க மண்ணில்தான் புதைந்துள்ளன.
உலக மக்கள் தொகையில் 13%-க்கும் அதிகமானோரைக் கொண்டுள்ள இந்த வளமிக்க கண்டத்தின் பங்களிப்பு, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Global GDP) வெறும் 2% மட்டுமே!
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC).
இன்று உலக மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அதிநவீன ஸ்மார்ட்போனுக்குள்ளும் இருக்கும் கோபால்ட், வைரம் மற்றும் தங்கம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் காங்கோவின் மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்டவைதான்.
முரண்பாடு என்னவென்றால், உலகிற்கே தொழில்நுட்பத் தீனியிடும் அந்த நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு இன்றுவரை மின்சார வசதி கூடக் கிடையாது.
அங்கு பிறக்கும் ஒரு குழந்தை 50 வயது வரை உயிர்வாழ்வதே ஒரு பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் எந்தெந்த நாடுகளின் மீது படை எடுத்தன என்று பாருங்கள்:
ஈராக், லிபியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், ஹைட்டி, மாலி, சூடான்.
இவற்றுக்கிடையே இருக்கும் பொதுவான ஒற்றுமையைக் கவனித்தால், இது தற்செயலாக நடந்தது அல்ல, துல்லியமாகச் செதுக்கப்பட்ட ஒரு ‘Business Model என்பது புரியும்.
ஆக்கிரமிப்பிற்கு முன் ஈராக்கின் எண்ணெய் கிணறுகள் சதாம் உசேனின் கீழ் அரசுடைமையாக்கப்பட்டு (Nationalized) இருந்தன.
ஆக்கிரமிப்பிற்கு பின் ஈராகில் அதாவது 2003-க்குப் பின் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அள்ளின.
ஆக்கிரமிப்பிற்கு முன் லிபியாவில் கடாபி மேற்கத்திய நிறுவனங்களுக்கு வழங்கிய எண்ணெய் சலுகைகளைப் பறிக்கத் தொடங்கினார்.
ஆக்கிரமிப்பிற்கு பின் கடாபியின் வீழ்ச்சிக்குப் பின், அந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டு மேற்கத்தியர் வசமாயின.
ஆக்கிரமிப்பிற்கு முன் காங்கோ நாட்டின் கனிம வளங்களை மக்கள் நலனுக்காகத் தேசியமயமாக்க முயன்ற பல உள்நாட்டுத் தலைவர்கள் உருவாக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பிற்கு பின் வளங்களை மீட்கத் துடித்த தலைவர்கள் அனைவரும் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது பதவியிறக்கப்பட்டனர்.
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமித்த ஈராக், லிபியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், ஹைட்டி, மாலி, சூடான் போன்ற நாடுகளைக் கவனித்துப் பார்த்தால் ஒரு பொதுவான உண்மை விளங்கும்:
வழிமுறை மிக எளிதானது:
முதலில் ஊடுருவுதல், பிறகு உள்நாட்டுப் புரட்சியைத் தூண்டி அமைதியைக் குலைத்தல், இறுதியாக ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் சுரண்டுதல்.
இதற்கு உலக அரங்கில் அவர்கள் சூட்டிக்கொள்ளும் நாகரிகமான பெயர்தான் “ஜனநாயக மீட்பு” அல்லது “மனிதநேயத் தலையீடு” (Humanitarian Intervention).
மேற்கத்திய நாடுகள் இந்த நாடுகளை நோக்கிப் படையெடுத்தது, அவை உலகிற்கு ‘ஆபத்தானவை’ என்பதால் அல்ல; மாறாக, அவை தங்களை விட ‘வளமிக்கவை’ என்பதால் மட்டுமே!
இந்த ஒற்றைப் புள்ளியை நாம் புரிந்து கொண்டால், கடந்த நூறு ஆண்டுகால உலகப் போர்களின் பின்னணியில் இருக்கும் நிஜமான அரசியல் நமக்கு விளங்கும்.
இவை வெறும் கற்பனைக் கதைகளோ அல்லது சதித் திட்டக் கோட்பாடுகளோ (Conspiracy theories) அல்ல;
அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கைகளும், அரசாங்க ஆவணங்களும் சாட்சியமளிக்கும் கசப்பான உண்மைகள்!
–
முகநூலில் முகிந்தன் துரைராஜசிங்கம்.
