பிரித்திவிராஜ் ராமலிங்கம்,காளி வெங்கட்,மைனா நந்தினி,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட், கலை இயக்குநர் விஜய் முருகன் ,ஜீவா சுப்பிரமணியம்,பாரத் நெல்லையப்பன் நடித்துள்ளனர்.என். அரவிந்தன் இயக்கியுள்ளார்.திரைக்கதை . வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்,கேமரா – படதொகுப்பு : மதன் குணதேவ்,பாடலாசிரியர் – கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா,இசை : கோவிந்த் வசந்தா,கதைக் கரு : பிரித்திவிராஜ் ராமலிங்கம்,ஸ்டண்ட் இயக்குநர் : ஓம் பிரகாஷ்.தயாரிப்பு -நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்.
ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் ஒரு நாள், அதுவும் ஓர் இரவு எப்படி இருக்கும் என்பதை ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள் அதனுள்ளே காதல், மோதல், தத்துவம், வாழ்வியல் என்ற அனைத்தையும் யதார்த்தமாகக் கலந்து 122.28 நிமிடப் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கதை நாயகன் பிரித்திவிராஜ் திருப்பூரில் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.இங்கே மேலாளர் உடன் பிரச்சினை, குடி இருக்கும் வீட்டுக்காரருடன் மோதல்,ஊரிலிருந்து பணம் அனுப்பவில்லை என்றுகேட்கும் மனைவியுடன் சண்டை, போலீஸ் பிடித்து வைத்திருந்த போது ஸ்டேஷனிலிருந்து வாக்கி டாக்கி, போலீஸ் சட்டை உடன் தப்பித்து ஓட்டம் ,தன்னுடன் கல்லூரியில் படித்த மைனாவுடன் பேசி அந்த குடும்பத்தில் கலகம், போகிற வழியில் நட்பான ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டுடன் சேர்ந்து ஒரு அலம்பல்,ஏடிஎம் மெஷின் உடைப்பு,போலீஸ் தேடல் இப்படி கச்சேரி களை கட்டுகிறது. இடையே குழந்தை கடத்தல், அது சம்பந்தமான போலீஸ் தேடுதல் வேட்டை என்று சேர்ந்து கொள்ள டாப் கியரில் பறக்கிறது கதை. அதன் பிறகு படம் விறுவிறுப்பை ஏற்றிக் கொண்டு விரைகிறது. முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
இதில் கதை நாயகன் சாந்தகுமார் ஆக நடித்திருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடை உடை, பாவனை ,பேச்சு, உடல் மொழி என்று பிரமாதப்படுத்தி உள்ளார்.அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தி ஒரு புதுமுக நடிகர் என்பதை நம்ப முடியாத அளவிற்கு நடித்துள்ளார்.
ஆட்டோ டிரைவர் நேருவாக வரும் காளி வெங்கட் வழக்கம் போல யதார்த்தமாக நடித்துள்ளார்.கலை இயக்குநர் விஜய் முருகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாது தயாளனாக வருகிறார். அலட்டிக் கொள்ளாமல் பார்வையிலேயே மிரட்டி அசத்தியுள்ளார்.
மைனா நந்தினி,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட்,ஜீவா சுப்பிரமணியம்,பாரத் நெல்லையப்பன்ஆகி யோரும் தங்கள் வேலையைச் சரியாக செய்துள்ளனர்.
சினிமாத்தனம் துளியும் கலக்காமல் யதார்த்தமாக இந்தப் படம் செல்வதும் காட்சிகள் நகர்வதும் தனி ஒரு திரையனுபவமாக இருக்கிறது.இது பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை ஒவ்வொரு காட்சியிலும் பொருத்திப் பார்த்துக் கொண்டு சிரித்து சிந்தித்து வருந்தி குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிக் கொள்வார்கள்.
ஒரே இரவு நடக்கும் கதையில் ஆங்காங்கு எதிர்ப்படும் கதை மாந்தர்கள் அனைவரும் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். குடிகாரனின் பயணம் நடுவே ஒரு குழந்தைக் கடத்தல்,குற்றவாளிகளைப் போலீஸ் தேடுதல் வேட்டை என்கிற விறுவிறு அம்சமும் அதில் ஏறிக்கொண்டு படத்தை வேகமாக நகர்த்திச் செல்கிறது.
குடிக்கும்போது அந்த மனிதனின் மனம் குரங்காகி விடுகிறது என்பார்கள். ஆனால் உண்மையில் போதையில் அவனது உண்மையான சொரூபம் வெளிப்பட்டுவிடுகிறது என்பதாகத்தான் பல காட்சிகள் உள்ளன.குடியின் போது வெளிப்படும் மனிதனின் வீராவேசம் , பலவீனங்கள், பாசம் ,காதல் அனைத்தும் சாந்தகுமார் பாத்திரத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளன.
ஆங்காங்கே தத்துவ வாசனை வீசும் வசனங்கள் உள்ளன’.வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவன் சிரிக்கவும் மாட்டான் அழவும் மாட்டான்,நிம்மதி கரன்சி மாதிரி, கைமாறிக் கொண்டே இருக்கும் ‘ என்பது ஒரு சாம்பிள்.
கதையின் போக்குக்கேற்ற மதன் குணதேவின் ஒளிப்பதிவும் கோவிந்த் வசந்தாவின் பாடல்களின் இசையும் பின்னணி இசையும் பக்கபலமாக இணைந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.அம்புலியே ஆராரோ, மின்மினியே ராசாத்தி போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கும் ரகம்.
மொத்தத்தில் ‘ குட் டே’ திரைப்படம் பார்க்கும் மனிதர்களையே தன்னுள் திரையில் காணும் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘குட் டே’ எனலாம்.