சமீபத்தில் சென்னை, கடலூரில் வந்த மழையில் டி.வி. சானல்களைத் திறந்தாலே வெள்ளக் காடான ரோடுகளும், தண்ணீர் புகுந்த வீடுகளும் தான் காட்சிகள். மழை பெய்யாவிட்டால் புலம்பும் மக்கள், மழை பெய்தால் மழை பாதிப்பு என்று புலம்பும் நிலை. ஏன் இது நடக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் காரணம் நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், கால்வாய்களை ஆக்கிரமித்து மூடி அவற்றில் வீடு கட்டி வாழ்வது. அது போக சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாதது.

தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் கண்மாய்களில் பெரும்பான்மையானவை மழை வடிநீர் கால்வாய்களாகும். மழை பெய்தால் ஏரிகள் நிறைந்து, கண்மாய் நிறைந்து வடிகால்கள் நிறைந்து, கிணறுகள் நிறைந்து பின்பே நீர் கடலில் கலக்கும். அதனால் நிலத்தடி நீர் அதிகமாகும். போர் போட்டு எவ்வளவு தண்ணீரை உறிஞ்சினாலும் நமக்கு தண்ணீர் கிடைக்கும்.

ஆனால் இப்போது நகரங்களில் கட்டப்படும் வீடுகளில் கிணறு, மழை நீர் சேகரிப்புத் தொட்டி போன்ற மழை நீர் சேகரிப்பே கிடையாது. மழை நீரை சேகரித்து தங்களது வீட்டினடியில் நிலத்தடி நீரை அதிகப்படுத்தினால் தான் பின்னால் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அபார்ட்மெண்ட்கள் அமைக்கும் போது பார்க்குகள், குளங்கள் போன்ற விஷயங்களுக்கு இடம் விட்டு கட்டினால் தான் அதில் மழை நீர் சேமித்து அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீரை பெருக்க முடியும்.

அடுத்த விஷயம் சாலை போட்டு போட்டு இடத்தை மேடாக்கிவிடுவது. ஒவ்வொரு முறையும் சாலை போடும்போது, பழுதடைந்த சாலையை சுரண்டிவிட்டு, புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதுபோல பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்வதில்லை.

சாலை மட்டம் உயர்த்தப்படக் கூடாது என்பது தான் நகர நிர்மாணத்தில் நிபந்தனையாகும். சாலை மட்டத்துக்கான வரையறை (பெஞ்ச் மார்க்) என்பது வெளிநாடுகளில் மிகவும் கண்டிப்பான நடைமுறையாக இருக்கிறது. நம் நாட்டில் இது தலைகீழாக உள்ளது. சாலை போடும்போது ஏற்கனவே உள்ள சாலையை சுரண்டி எடுத்துவிட்டு போடாமல் அதன் மேலேயே ரோடு போட்டு ரோட்ட,ுி்பாதாள சாக்கடை மூடியை சற்று உயர்த்தி விடுகிறார்கள். அடுத்து சாலை போடும்போது அந்த மட்டத்துக்கு சாலை உயர்த்தப்படும் என்ற எண்ணத்தில் அதுபோல செய்கின்றனர். அப்படி சாலையை உயர்த்தும்வரை சாலை விபத்துகள் தவிர்க்க முடியாததாகிறது.

உதாரணத்துக்கு 3 ஆண்டுகளில் சாலை அரை அடி முதல் முக்கால் அடி வரை உயர்த்தப்படுகிறது. அதனால் சாலையின் குறுக்கே உள்ள பாலங்களில் லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது அதன் மேற்கூரை பாலத்தை உரசிக் கொண்டு போவதைக் காணலாம்.

பொதுவாக வீடுகள் கட்டும்போது 3 அடி முதல் 5 அடி அளவுக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. சாலை மட்டம் உயர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டு இப்போது 5 முதல் 6 அடி வரை அடித்தளம் போடுகின்றனர். அதனால் கட்டுமானச் செலவு அதிகரிக்கிறது. அப்படியே செலவு செய்து கட்டினாலும், அடுத்த 10 ஆண்டுகளில் சாலை மட்டம் உயர்ந்து, வீடுகளின் தரைப்பகுதி பள்ளமாகிவிடுகிறது.

இதனால், மழைக்காலங்களில் மழைநீர் எளிதாகப் புகுந்து விடுகிறது. பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் சாலை உயர்ந்ததால் பள்ளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்குவதைக் காண முடிகிறது.

இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:

“நீர் வழிந்தோடும் போக்குக்கு (நீரோட்டம்) ஏற்ப சாலைகளை அமைக்காவிட்டால், வீடுகளுக்குள் மழைநீர் புகுதல் உள்ளிட்ட பாதிப்புகளை தவிர்க்க முடியாது. தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில் நீரோட்டத்தைக் கணக்கிட்டு சாலை போடாததால், மழைநீர் பெருமளவு தேங்குகிறது. எனவே, நீரோட்டத்தைக் கணக்கிட்டு குறிப்பிட்ட சாலையின் உயரத்தை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது என்று உத்தர விட வேண்டும். அந்த உத்தரவை ஒப்பந்ததாரர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் சென்னையின் புராதனச் சின்னங்களாக கருதப்படும் கோயில்கள், மாநகராட்சி, உயர் நீதிமன்றம், சாந்தோம் பேராலயம் போன்றவை மழைநீர் தேங்கும் இடங்களாகி விடும் அபாயம் உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலைதான்” என்கிறார் வெங்கடாசலம்.

அ்தனால் இனி வீடு கட்டும் போது நன்கு இடம் விட்டு வீட்டுக்கு வெளியே மழை நீர் பூமிக்குள் செல்ல போதுமான வழி விட்டு கட்டுங்கள். சிமெண்ட் போட்டு தரை மொத்தத்தையும் பூசி மூடிவிடாதீர்கள். மழை நீர் பூமிக்குள் போக வழியில்லாது போய்விடும். தெருவிலோ, ரோட்டிலோ ரோடு போட வருபவர்கள் ரோட்டை பெயர்த்து எடுத்து விட்டு ரோடு போடாவிட்டால் போலீஸில் புகார் செய்து அவர்களை ரோட்டைப் பெயர்த்து எடுத்து விட்டு அப்புறம் புதிய ரோடு போடச் செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வீடு பள்ளமாகாமல் காக்கலாம்.

Related Images: