சமீபத்திய அன்புப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாக கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்றொரு பரபரப்பான செய்தி கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ரஜினி, கமல் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இன்னொரு பக்கம் அது ஒரு ஐயப்ப பக்திப்பாடலின் அட்டக்காப்பி என்பதும் பகிரப்பட்டு சந்தி சிரிக்கிறது.

அடுத்தகட்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. வரும் 7 – ந்தேதி சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி – கமல் இருவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார்.அப்போது இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Images: