போட்டு வாங்குவது என்கிற அடிப்படையில் அஜீத்,ஹெச்.வினோத் கூட்டணியின் ‘வலிமை’படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார் என்று அடித்து விடப்பட்ட செய்திகளை அப்படக்குழு மறுத்துள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

வலிமை படத்துக்கு தேர்வான நடிகர், நடிகைகளிடம் படம் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் மவுனம் காக்கிறார்கள். படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம், வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கினர்.மேலும் பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், வலிமை படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இதன் அடுத்த கட்டமாக ‘பட்டாஸ்’தனுசுடன் சோடி போட்டு பட்டயக்கிளப்பிய சிநேகா வலிமை படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதாக ஒரு செய்தி விரைவில் கிளப்பப்படும் என்று தெரிகிறது.\

Related Images: