பா.ஜ,கவின் பலத்த ஆதரவு இருக்கிறது என்கிற மமதையில், பெரியார் குறித்து தான் உளறிக்கொட்டியது குறித்து மன்னிப்புக் கேட்கப்போவதில்லை’என்று பத்திரிகையாளர்களை நடுரோட்டில் நிற்கவைத்து வறட்டுப் பிடிவாதம் பிடித்தார் ரஜினி.

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அதில், ‘1971ல் சேலத்தில் இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்’ என்று குறிப்பிட்டார்.

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு எதிராக இன்று அவர் வீடு முன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக கூறினர். இதனால் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது வீட்டு வாசல் என்ற பெயரில் ரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 1971ல் திராவிடர் கழகம் நடத்திய பேரணி குறித்து பேசிய கருத்துக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.‘1971ல் சேலத்தில் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம். ராமர், சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர். இந்த விஷயத்தில் நான் இல்லாததையோ, கற்பனையாகவோ எதையும் சொல்லவில்லை. 2017ல் அவுட்லுக் பத்திரிகையில் வந்த செய்தியையும் நான் கேள்விப்பட்டதையும் நான் பேசினேன். ’ என ரஜினி கூறினார்.

Related Images: