நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். அப்படத்தின் தாக்கத்தில் விவசாயிகளுக்கு நல்ல உதவிகள் செய்ய எண்ணி புதிதாக
உழவன் பௌன்டேஷன் என்கிற அறக்கட்டளையை தொடங்கியுள்ளாராம். அந்த தன்னார்வ நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு பரிசுகளும் உதவித்தொகையும் வழங்கியுள்ளார்.
சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் அவரது தந்தை நடிகர் சிவகுமார் வழங்கியுள்ளார்.

சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியொன்றும் நடத்தியுள்ளார். அதில் சிறந்த கருவி கண்டுபிடித்து வெற்றி பெற்றவர்களில், முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமாருக்கு ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமிக்கு ரூ.25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் சிறப்பு பரிசாக புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போஸுக்கு ரூ. 25 ஆயிரமும் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் ஆகியவை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.

விழாவில் கார்த்தி பேசுகையில், “விவசாயிகளை கெளரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்பதோடு விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை நோக்கி நகர வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்க பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, பார்வை திறன் சவால் உள்ள விவசாயி, உற்பத்தி விலை இல்லாமல் நலிவடையும் விவசாயி, மாற்றத்திற்கான பள்ளியில் தற்சார்பு வேளாண்மையை கற்கும் மாணவர்கள் போன்றவர்களை ஊக்கப்படுத்த தலா 50,000 ஊக்கத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.

Related Images: