அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக எண்ணெய் வர்த்தகம் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பது. அமெரிக்காவின் இந்த போக்கை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானை பல வழிகளில் முடக்க, ஈராக்கை ஏற்கனவே அழித்தது போலவே, தீவிரவாதிகள், அனு ஆயுதம் , பொருளாதாரத் தடை என்று பல தந்திரங்களை செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று ஈராக்கிற்கு சாதாரண பயணமாக சென்றிருந்த ஈரான் நாட்டு தளபதி க்வாசம் சொலிமானியை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஈராக் நாட்டு விமான தளத்தில் இருந்த கார்கோ பகுதியில் ஒரு காரில் அமர்ந்து கிளம்ப இருந்த தளபதி சொலிமானியும் அவருடன் காரில் இருந்த 8 ஈராக் நாட்டு ராணுவ அதிகாரிகளும் ட்ரோன் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்கள்.

சொலிமானியை திட்டமிட்டு தாக்கிக் கொல்ல அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
“சொலிமானி ஈராக்கில் உள்ள அமெரிக்க டிப்ளோமேட்டுகளையும் சேவை செய்பவர்களையும் தாக்குவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருந்ததால் திட்டமிட்டு அவரைக் கொன்றோம்.” என்று அமெரிக்க தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஏமன், லெபனான், ஈராக், சிரியா நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி கொடுத்து வந்தது ஈரான். அவற்றை அங்குள்ள தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவியது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி, அதன் காரணமாகத்தான் தளபதி சொலிமானியை, அவர் தனியே வேறு அலுவலாக போனபோது கொன்றோம் என்று சர்வசாதாரணமாக சொல்கிறார் ட்ரம்ப்.

62 வயதாகும் சொலிமானி 1998ல் ஈரான் நாட்டின் தலைமை ராணுவ தலைமை காமாண்டராக பதவியேற்றார். ஈரான் அதிபர் கோமேனிக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்டவராக விளங்கி வந்தவர். அவர் கொல்லப்பட்டதை மூன்று நாள் தேசிய துக்க தினமாக ஈரான் அறி்வித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஷெரிப் “இது அமெரிக்காவின் சர்வேதச பயங்கரவாதம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் கோமேனி “இந்தக் குற்றத்தைச் செய்த கொலைகாரர்கள் பழி தீர்க்கப்படுவார்கள்” என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார். ஈராக் அதிபர் அப்துல் மஹ்தி “அரேபிய பகுதியில் பதற்றத்தை ஆபத்தான வகையில் பெரிதாக்கியுள்ளது அமெரிக்காவின் இச்செயல்” என்று கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா சர்வதேச விதிகளை மீதி இத்தாக்குதலை நிகழ்த்தி ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளது என்று சீனா கண்டித்துள்ளது.

இப்படி பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க அமெரிக்கா தனக்கு ஆதரவாய் பலநாடுகளை சேர்த்துக் கொண்டுள்ளது. “ஈரான் அமெரிக்காவை தாக்கப்போவதாக அறிவித்துள்ளது. நாங்கள் போரைத் தொடங்க அல்ல போரை நிறுத்தவே சொலிமானியை கொன்றோம். ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் 52 இடங்களில் குறிவைத்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராயிருக்கிறோம்” என்று நேற்று எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்.

இன்று ஜனவரி 5ஆம் தேதி, ஈரான் நாடு ஈராக் நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது பதிலடி ஏவுகணை தாக்குதல் தொடுத்துள்ளது. இந்தச் சூழலில் மோடி ட்ரம்பிற்கு ஆதரவாக நிற்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன.

அமெரிக்கா போன்ற ஒரு நாடு நமது நாட்டின் உள்ளே எல்லை மீறி வந்து நம் நாட்டு ராணுவத் தளபதியை சுட்டுக் கொன்றால் நாம் என்ன செய்வோம்?

Related Images: